வெயிலுக்கு இதமா ஈர உடை போடுறீங்களா? அப்ப இந்த வியாதி கன்ஃபார்ம்! டாக்டர்கள் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகவே அந்த 14 மாவட்டங்களுக்கும் நேற்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது.
இதற்கான அறிவிப்பை இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா வெளியிட்டார். இந்த வெப்ப அலைக்கு Hot and Humidity weather என்றும் பெயர் சூட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுவாக மஞ்சள் அலட்ர் என்றால் கவனம் தேவை என்று சொல்வார்கள். இன்னும் கத்தரி வெயில் ஆரம்பிக்கவே இல்லை, அதற்குள் மஞ்சள் அலர்ட் விடும் அளவுக்கு வெயில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.
வெயில் காலத்தில் என்ன சாப்பிடலாம்:
இந்தக் கோடைக் காலத்தில் என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்? எதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்று விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் ஸ்ருதி, "கூடுமானவரைத் திரவ உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். தேவையில்லாமல் சோடா, பன்னாட்டுக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது மிகமிக நல்லது.
அதற்குப் பதிலாகப் புளித்துப் போகாத நீர் மோர் எடுத்துக்கொள்ளலாம். நீங்களே வீட்டில் தயாரித்துச் சாப்பிட்டால் நல்லது. கடைகளில் போடப்படும் ஐஸ் கட்டிகளின் தரம் நன்றாக இருப்பதில்லை.

அப்படி சுகாதாரமற்ற ஐஸ் கட்டிகளைக் கலந்து நீங்கள் மோர் அல்லது ஜூஸ் அருந்தினால் அதுவே சில உபாதைகளை உண்டாக்கும்.
வெளியில் குடிப்பதாக இருந்தால் இளநீர் பெஸ்ட். அதை நீங்கள் தைரியமாக உட்கொள்ளலாம். பட்டர் மில்க் எடுக்கலாம். நீங்கள் வெளியே செல்லாமல் வீட்டிலிருந்தால் கூட, இந்த திரவ பானங்களை அருந்துவது இந்த வெயில் காலத்தில் உடலுக்கு நல்லது.
வெயிலில் வெளியே செல்லாமல் இருந்தாலும் கூட உடலில் உள்ள நீரானது நம்மை அறியாமல் வேர்வையாக வெளியேறிக் கொண்டே இருக்கும். அதை நாம் உணர மாட்டோம்.
அதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். ஆகவே, நீங்கள் ஒரு நாளைக்குக் கட்டாயம் 3 லிட்டர் நீரை எடுத்துக்கொள்வது கட்டாயம்.

கட்டாயம் இந்த வெயில் காலங்களில் டீ, காபி போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மது அருந்துவது கூடவே கூடாது.
செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்து, இயற்கை பானங்களை உட்கொள்வது மிகமிக நல்லது. அதிக நிறமி உள்ள குளிர்பானங்களைத் தவிர்ப்பது புத்திசாலித்தனமான முடிவு" என்கிறார்
தோல் சார்ந்து வரும் உபாதைகள்:
இதே வெயில் காலங்களில் அதிகமாகத் தோல் நோய் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் வரும் என்கிறார் தோல் மருத்துவர் கத்திஜா.
"வெயில் அதிகம் உள்ளதால் காட்டன் உடைகளை அணிவது நல்லது. அதேபோல் ஒருநாளைக்கு ஒரு உடை அணிவதே நல்லது. வியர்வை வெளியேறிய உடையை மீண்டும் துவைக்காமல் பயன்படுத்தக் கூடாது.

ஏனென்றால் அதில் துர்நாற்றம் வீசுவதுடன் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா இருக்கும். ஆகவே, அதைத் தவிர்க்க வேண்டும்.
அதைப்போல வியர்வை உடலிலிருந்து வெளியேறினால், அதைத் தனியே ஒரு துணியை வைத்துத் துடைத்துவிட வேண்டும். அது உலரும் வரை அப்படியே விட்டால், அந்த இடத்தில் பாக்டீரியா உருவாகி தோல் நோய் வரலாம். அல்லது தோல் அரிப்பு போன்ற உபாதைகள் உருவாகலாம்.
வெயில் காலம் தானே என்று ஈரமான உடைகளை அணியக் கூடாது. நன்றாக வெயிலில் காய்ந்த உடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

துணிகளை இஸ்திரி செய்யும் போது உடையின் உள் பக்கம் வைத்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் அங்குள்ள பூஞ்சைகள் மடிந்துபோகும்
அடிக்கின்ற மாதிரி அதிக நிறம் கொண்ட உடைகளைக் கட்டாயம் அணியக் கூடாது" என்கிறார் இந்த மருத்துவர்.












Click it and Unblock the Notifications