தமிழகத்தின் நிலை... குடத்தோடு அலையும் பெண்கள்.. ஊறுகாயோடு அலையும் ஆண்கள்.. 'தண்ணிக்காக'!
தமிழகத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் "தண்ணீரை" தேடி அலைந்து வருகின்றனர்.
சென்னை: தமிழகத்தில் உள்ள பெண்கள் காலிக் குடங்களுடனும், ஆண்கள் ஊறுகாயுடனும் அலைவது எல்லாம் எதற்கு, தண்ணீருக்காகதான்.
கடந்த 2015-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பல்வேறு ஏரிகள் உடைந்ததால் சென்னை, புறநகர் பகுதிகளில் இரு தளங்கள் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்ததது. இந்நிலையில் இதற்கு தண்ணீர் ஓட வழியில்லாததால் குடியிருப்புகளுக்குள் வந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரிலிருந்தே அனைத்து நீர் நிலைகளும் வறண்டு போக தொடங்கின.

தண்ணீர் தட்டுப்பாடு
கொளுத்தும் வெயிலால் ஆங்காங்கே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் தண்ணீரின்றி கடும் வறட்சியில் அவதிப்பட்டு வருகின்றனர். நீர் நிலைகளும் வறண்டு விட்டதால் அதிலிருந்து தண்ணீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் வாழ்வாதாரத்துக்காக போராடி வந்த ஏழை மக்கள் தற்போது தண்ணீருக்காக தவியாய் தவித்து வருகின்றனர். இதனால் ஆத்திரத்தில் உள்ள மக்கள், தண்ணீர் பிரச்சினையை தீர்க்காமல் உள்ளதாக அரசு மீது குற்றம்சாட்டி மக்கள் பிரதிநிதிகளை முற்றுகையிட்டும், சாலைகளை மறித்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலிக் குடங்களுடன்
காசு கொடுத்து தண்ணீர் வாங்கி கட்டுப்படி ஆகாததால் மக்கள் காலிக் குடங்களுடன் தெரு தெருவாக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். எனினும் அக்னி தொடங்குவதற்கு முன்பே இந்த நிலை என்றால், அக்னி நட்சத்திரத்தின்போது என்ன செய்வது என்று செய்வதறியாமல் திகைத்து வருகின்றனர்.

மதுபானக் கடைகள் மூடல்
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள்பட்டுள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 1-ஆம் தேதி முதல் தமிழக நெடுஞ்சாலையில் உள்ள 3500-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. மேலும் வேலையின்மை காரணமாக அவதியடைந்து வரும் டாஸ்மாக் ஊழியர்கள் ஊருக்குள் கடை வைக்க முயற்சித்தால் பெண்கள் அடித்து உடைத்து துவம்சம் செய்கின்றனர். இதனால் அவர்களால் ஊருக்குள்ளும் கடை வைக்க முடியவில்லை.

அவதியில் குடிமகன்கள்
பொதுமக்கள் போராட்டங்களால் நேற்றிருந்த கடை இன்று இல்லை என்பதால் மதுபானக் கடைகளைத் தேடி குடிமகன்கள் ஊறுகாய் பொட்டலங்களுடன் அலைந்து வருகின்றனர். தற்போது காலிக் குடங்களுடன் பெண்களும், ஊறுகாயுடன் ஆண்களுக்கு அலைந்து வருவது தண்ணீருக்கான தேடலே ஆகும்.












Click it and Unblock the Notifications