ரஜினிகாந்த்தின் 31ம் தேதி அரசியல் அறிவிப்பு ரகசியம் இதுதானா?
அரசியல் கட்சிக்கான ஆப் 6 மாத அரசியல் கருத்துக் கேட்பு ரஜினியின் டிசம்பர் 31 அறிவிப்பின் ரகசியம் இது தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
Recommended Video
சென்னை: கமல் பாணியில் அரசியல் கட்சிக்கான செயலி முதலில் பின்னர் 6 மாதங்களுக்கு அரசியல் குறித்து ரசிகர்கள், மக்களிடம் கருத்துக் கேட்பு இது தான் ரஜினியின் டிசம்பர் 31 அறிவிப்பின் ரகசியம் என்று காத்து வாக்கில் செய்திகள் காதில் வந்த விழுகின்றன.
டிசம்பர் 31 தன்னுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிப்பதற்கான நாளாக நடிகர் ரஜினி தேதி குறித்திருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா, தனிக்கட்சி தொடங்குவாரா மாட்டாரா அல்லது வேறு அரசியல் கட்சியை ஆதரிப்பாரா என்ற பல்வேறு கேள்விகளுக்கு அன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவில்லை என்னுடைய நிலைப்பாடு என்ன என்று தான் 31ம் தேதி அறிவிக்கப் போவதாக ரஜினி ரசிகர்கள் மத்தியில் அழுத்தம் திருத்தமாக கூறி இருக்கிறார். ரஜினியின் பேச்சுகளில் இந்த முறை நல்ல தெளிவு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் மத்தியில் பேசும் போது உங்களிடம் பேச நிறைய இருக்கிறது நிறைய பேசுவோம் என்று சஸ்பென்ஸ் வைத்துக் கொண்டே இருக்கிறார்.
ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்
இதனால் நாளுக்கு நாள் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஒருபுறம் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி அவருடைய ஜாதகம் அப்படித் தான் சொல்கிறது என்று ஜோதிட கணிப்புகளும் களைகட்டுகின்றன.
ரஜினி என்ன அறிவிக்கப் போகிறார்?
இதனிடையே அப்படி என்ன தான் ரஜினி டிசம்பர் 31ல் அறிவிக்கப் போகிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது சில விஷயங்கள் சிக்கியுள்ளன. அதில் முதலாவது ரஜினி, கமல்ஹாசனைப் போல முதலில் தன்னுடைய அரசியல் கட்சிக்காக ஒரு செயலியைத் தான் 31ம் தேதி அறிமுகம் செய்வார் என்று சொல்லப்படுகிறது.
மக்களிடம் கருத்து கேட்க முடிவு
இந்த செயலி அறிமுகத்தை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்குவது பற்றி ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் கருத்து கேட்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். அதைத் தான் ரஜினி உங்களிடம் பேச நிறைய இருக்கிறது பேசப் போகிறேன் என்றெல்லாம் அவ்வபோது ரசிகர்கள் மத்தியில் சொல்லி வருகிறாராம்.
இத தான் ரகசியமா?
இதே போன்று காலா படம் திரைக்கு வர 6 மாத காலங்கள் இருக்கும் நிலையில், இந்த இடைபட்ட காலத்தில் கருத்துக்கேட்பு படலங்கள் முடிந்து விடும் என்று ரஜினி திட்டமிட்டிருக்கிறாராம். காலா படத்திற்கு பிறகு மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அறிந்தே அரசியல் கட்சி முழுவடிவம் பெறும் என்பது தான் நாளை மறுதினம் அருணாச்சலம் ரஜினி சொல்லப் போகிறார் என்பதே தற்போதைய தகவலாக இருக்கிறது.