தமிழக அரசியலுக்கு தேவை பிரபலங்களா? மக்கள் தலைவனா?
ரஜினி, கமல் வேண்டாம் தமிழக அரசியல் களத்திற்கு ஜிக்னேஷ் மேவானி போன்றோர் தான் தேவை என்று கர்நாடக இசைக் கலைஞர் டி. எம். கிருஷ்ணா கூறியதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறதோ.
சென்னை: தமிழக அரசியலுக்கு ரஜினி, கமல் போன்ற பிரபலங்கள் வேண்டாம், மக்களின் பிரச்னைகளை அறிந்து செயல்படக் கூடிய ஜிக்னேஷ் மேவானி போன்றோர் தான் தேவை என்று டி.எம்.கிருஷ்ணா சொன்னது ஏற்கக் கூடியதா?. தமிழகத்தின் இன்றைய அரசியல், மக்கள் மனநிலைக்கு யார் தேவை என்பதை அலசுகிறது இந்த கட்டுரை.
தமிழக அரசியல் களம் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகும் கருணாநிதியும் தீவிர அரசியல் ஓய்வுக்குப் பின்னரும் ஒரு வலுவான தலைமை இல்லாத நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. தேசிய கட்சிகள் தமிழகத்தில் கால்பதிக்க முடியாமல் இருந்ததற்கு முக்கிய சக்திகளாக இருந்தவர்கள் ஜெயலலிதாவும், கருணாநிதியும். அந்த அளவிற்கு மாநில திராவிட அரசியல் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.
ஆனால் இவர்களின் அரசியல் வெற்றிடம் பல ஆண்டுகளாக அரசியலில் நுழைய நினைத்தவர்களுக்கு வாய்ப்பாகியுள்ளது. திரைத்துறையில் கோலோச்சிய ரஜினியும், கமலும் அரசியலுக்கு வர ஆயத்தமாகியுள்ளனர். ஆனால் இவர்கள் எந்தப் பாதையில் பயணிக்கப் போகிறார்கள் என்பது தான் இதுவரை தெளிவுபடுத்தப்படாத விஷயம்.
சாதி இல்லாத அரசியலா?
ஆன்மிக அரசியலை கையில் எடுக்கும் ரஜினி சாதி, மதமில்லாத புதிய அரசியல் பாதை என்கிறார். ஆனால் தமிழக அரசியலில் சாதி அரசியல் என்பது பின்னிப் பிணைந்த ஒரு விஷயமாக இருக்கிறது. எத்தனை கொள்கைகள் வகுத்தாலும் கடைசியில் சாதி ஓட்டு என்ற புள்ளியில் தான் முடிவுபெறுகின்றன தேர்தல்கள்.
ஊழல் மட்டுமே பிரச்னையல்ல
இதே போன்று கமலும் நான் நாத்திகன் பிராமணன் என்று எங்குமே அடையாளப்படுத்திக் கொண்டதில்லை என்று அரசியலில் இருந்து சாதியை தள்ளி வைக்கிறார். ஆனால் இவர்கள் இருவரும் ஒத்துபோகும் ஒரு மையப்புள்ளி என்றால் அது ஊழல். தமிழகத்தில் ஊழலை ஒழிப்பேன் என்று தான் இருவருமே கூறுகின்றனர், ஆனால் ஊழல் என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்பதைத் தாண்டி வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் சாதிய வேறுபாடுகள் தான் முக்கிய பிரச்னைகளாக உள்ளன.
என்ன மாற்றத்தை தந்துவிட முடியும்?
மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளைத் தேர்தல் மூலம் தருவோம் என்கிறார்கள் ரஜினியும், கமலும். ஆனால் தங்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றும் யுத்தியால் என்ன மாற்றம் நடந்துவிடப் போகிறது என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
பிரபலம் வேண்டாம்
மற்றொருபுறம் பிரபலமான ஒருவர் மக்களை அணுகி அதற்கான பிரச்னைகளைத் தீர்ப்பதை விட மக்களில் மக்களாக உள்ள ஒருவரே தலைவனானால் தான் உண்மையில் மக்களின் பிரச்னைகள் என்ன என்பது உணர்ந்து அதற்கேற்ப செயல்பட முடியும். உதாரணத்திற்கு குஜராத் பிரதமர் மோடியின் செல்வாக்கு பெற்ற மாநிலம் ஆனால் அங்கு முதல்முறையே தேர்தல் களம் கண்ட இளைஞர் ஜிக்னேஷ் மேவானி வெற்றி கண்டிருக்கிறார். ஜிக்னேஷ் கையில் எடுத்தது தலித் அரசியல் என்றாலும் பல ஆண்டுகளாக உரிமைகள் மறுக்கப்படும் மக்களின் குரலாக ஒலித்ததால் தான் ஜிக்னேஷ் இன்று நாடு முழுவதும் பேசப்படுகிறார்.
அரசியல்வாதிகள் உருவாக்க விடுவதில்லை
ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரு இளைஞரை நம் சமூகமும் உருவாக்கவில்லை, அரசியல் கட்சியினரும் உருவாக்க விடுவதில்லை என்பது தான் நிதர்சனம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்களின் எழுச்சி என்பது அனைத்து அரசியல் கட்சியினரையும் அதிர வைத்தது, ஆனால் அது அத்தோடு முடிந்தது ஏன். தற்போது தமிழக அரசியலில் இருப்பவர்கள் அனைவருமே ஒன்று அரசியல் பின்புலம் இருப்பவர்கள் அல்லது பிரபலங்களாகத் தான் இருக்கின்றனர், மக்களில் ஒருவன் அரசியல் தலைவர் என்று யாரையும் சுட்டிகாட்ட முடியாத நிலையில் தான் அரசியல் களம் இருக்கிறது.
புதியவர்களை வளர விடாத கட்சிகள்
அப்படி புதிய சிந்தனைகளோடு அரசியல் களத்திற்கு யாரேனும் வரத் துணிந்தாலும் அவர்களை ஒன்று தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள நினைக்கின்றன வேர் பரப்பியுள்ள அரசியல் கட்சிகள். ஏனெனில் அவர்கள் தங்களைத் தாண்டி வளர்ந்து விடக் கூடாது என்ற எண்ணமே இதற்கு காரணம்,இதே போன்று அரசியலுக்கு வருபவர்களின் சிந்தனைகள் தொடக்கத்தில் நல்லதாக இருந்தாலும் மற்ற கட்சிகள் நடத்தும் பேரம் அதனால் கிடைக்கும் பலன்களைப் பார்த்து தாங்கள் வளர்ந்தால் மட்டும் போதும் என்ற நிறைவோடு தங்களது அரசியல் வட்டத்தை சுருக்கிக் கொள்வதும் காலம் காலமாக இருக்கும் கட்சிகளுக்கு வசதியாகிப் போய் விடுகின்றன.
தலையெழுத்து மாறாது
அரசியல் களத்திற்கு இளைஞர்கள் வந்தால் மட்டுமே அரசியலில் மாற்றம் என்பது சாத்தியம். அப்படி இல்லாத பட்சத்தில் மாறி மாறி ஆட்சி செய்யும் கட்சிகளின் ஆதிக்கத்தையும், வாரிசு அரசியல், சினிமா பிரபலங்களின் அரசியல் என்றே தான் காலத்தை ஓட்ட வேண்டி வரும். இந்த சாபக் கேட்டில் இருந்து தமிழகம் எப்போதுமே தப்பிக்க முடியாது இளைஞர்கள் அரசியல் வேண்டாம் என்று தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் வரை தமிழகத்தின் தலையெழுத்தை யாராலும் மாற்ற முடியாது என்பதே நிதர்சனம். காலம் காலமாக இருக்கும் பழைய சோற்றைவிட புதிது புதிதான துரித உணவுகள் எப்படி பிடிக்கிறதோ அதே போன்று இன்றைய தலைமுறையினரின் தேவைகளையும், பிரச்னைகளையும் நிவர்த்தி செய்ய அவர்களில் ஒருவரே தலைவனாக வேண்டும்.