நீண்ட நாள் கழித்த கருணாநிதியை சந்தித்த குஷ்பு… பேசியது என்ன?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு விழா ஒன்றில் சந்தித்து பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓராண்டுகளுக்குப் பின்னர் கருணாநிதியை சந்தித்த குஷ்பு அவரிடம் ஆசி பெற்றுள்ளார்.
சினிமாவிலும் சின்னத்திரையிலும் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்த நடிகை குஷ்பு கடந்த 2010ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். திமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார்.
குறுகிய காலத்தில் அக்கட்சியின் முன்னணி பிரசார பிரமுகராக வலம் வந்த குஷ்பு, 2011 சட்டசபை தேர்தல், 2014 லோக்சபா தேர்தல்களில் தமிழகம் முழுவதும் திமுகவிற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றி தனது கருத்தை சுதந்திரமாக வெளியிட்டதில் பொருளாளர் மு.க. ஸ்டாலினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அத்தோடு, வீடு மீது தாக்குதல், செருப்பு வீச்சு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் குஷ்பு மனவேதனை அடைந்தார்.
மனக்கசப்பு இருந்தாலும் திமுகவில் நீடித்தார். கலைஞர் டிவியில் சீரியல். அக்கட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திமுகவில் இருந்து திடீரென விலகினார். அரசியலில் ஈடுபடாமல் சீரியல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்.
கலைஞர் டிவி சீரியலில் இருந்தும் விலகிய குஷ்பு காங்கிரஸ் கட்சியில் குஷ்பு இணைந்து கொண்டார். அதன்பிறகு கருணாநிதியை சந்திக்கவேயில்லை. இந்நிலையில், வைரமுத்து எழுதிய சிறுகதைகள் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் கமல்ஹாசன், நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, கருணாநிதியை, குஷ்பு சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். மேலும், கருணாநிதியின் உடல் நலம் குறித்து குஷ்பு அக்கறையுடன் கேட்டறிந்தார். திமுகவில் இருந்து விலகி ஓராண்டுகளுக்கு மேல் கருணாநிதியை சந்திக்காமல் இருந்த குஷ்பு தற்போது விழா ஒன்றில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவேன் என்று கூறியிருந்தார். ஆனால், கருணாநிதியை சந்திக்கவே இல்லை குஷ்பு. இந்தநிலையில் கருணாநிதியிடம் ஆசி பெற்றுள்ளார் குஷ்பு.