2-ம் கட்ட தலைவர்களே இல்லாத அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும்?
முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
சென்னை: தமிழக முதல்வராகவும் அதிமுக பொதுச்செயலராகவும் இருந்த ஜெயலலிதா காலமான நிலையில் அதிமுகவின் எதிர்காலம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். அதிமுகவின் வலிமை மிக்க தலைவராக எம்ஜிஆர் திகழ்ந்த போதும் தமக்கு அடுத்து 2-ம், 3-ம் கட்ட தலைவர்களையும் அவர் உருவாக்கியிருந்தார்.

எம்ஜிஆர் உயிரோடு இருந்த காலத்திலேயே இந்த 2-வது, 3-வது கட்டத் தலைவர்கள் கோலோச்சியும் வந்தனர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டு பின்னர் ஒன்றாக இணைந்தது. 1991-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார்.
அதன்பின்னர் அதிமுகவில் 2-ம் கட்ட தலைவர்கள் என்பதே இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது. அதிமுகவைப் பொறுத்தவரையில் எல்லாமும் ஜெயலலிதா மட்டுமே என்ற நிலை உருவானது. எம்ஜிஆர் காலத்திய தலைவர்கள் பெரும்பாலானோர் அதிமுகவை விட்டு வெளியேறும் நிலையும் உருவானது.
தற்போதைய நிலையில் அதிமுகவை வழிநடத்தக் கூடிய 2-ம் கட்ட வலிமையான தலைவர்கள் இல்லை. அதே நேரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவும் அவரது குடும்பத்தினரும்தான் அதிமுகவை தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாள்முதலே அதிமுகவை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டில் சசிகலா தரப்பு வைத்திருந்தது. ஆனாலும் அரசியலில் வெளிப்படையான அனுபவம் எதுவும் இல்லாத சசிகலா தரப்பால் அதிமுக எனும் பேரியக்கத்தை முன்னெடுத்துச் சென்றுவிட முடியுமா? என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது.
ஏற்கனவே அதிமுகவை சிதைப்பதற்கான முயற்சிகள் பல தரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு அதிமுக எனும் மாபெரும் அரசியல் இயக்கத்தை ஜெயலலிதாவைப் போல கட்டிக்காக்கக் கூடிய வலிமையான ஒரு தலைவர் இப்போதைக்கு இல்லை என்பதே நிதர்சனம். இது அதிமுகவின் எதிர்காலத்தை பெரும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.












Click it and Unblock the Notifications