சிக்கல்.. சிக்கலுக்கு மேல் சிக்கல்.. பெரும் இடியாப்ப சிக்கலில்.. தவிக்கும் அதிமுக அரசு
அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக தமிழக அரசு நடவடிக்கை செய்யுமா?
சென்னை: சிக்கல் மேல் சிக்கலாகி... கடைசியில் பெரிய இடியாப்ப சிக்கலில் மாட்டி கொண்டுள்ளது அதிமுக அரசு.
'எங்களுக்குள் ஒரு சண்டையும் இல்லை.. நாங்க ஒத்துமையாத்தான் இருக்கோம்' என்று மாறி மாறி அமைச்சர்கள் மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து வந்தாலும், உட்கட்சி பூசல் இன்னும் தலைவிரித்துதான் ஆடுகிறது.

நிலவும் குழப்பம்
மதுசூதனை ஆளாளுக்கு சந்தித்து விட்டு வந்ததிலிருந்தே, அதிமுகவில் எப்போ என்ன நடக்குமோ என்று எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் இனி என்னதான் செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் உண்மையிலேயே ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்களா என்ற குழப்பம் இன்னமும் நிலவி வருகிறது.

பெருமையில் முதல்வர்
இதனிடையே "சசிகலா குடும்பத்தால் இனி அதிமுகவிற்கு வரவே முடியாது, இடைத்தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடும்" என்று ஓபிஎஸ் ஒரு பக்கம் கொக்கரித்து வருகிறார். "அதிமுக கிளைச்செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த நான் இன்று முதல்வராகியுள்ளேன்" என்று பெருமை பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "திமுக ஒரு சந்தர்ப்பவாத அரசியல்" என்றும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகிறார்

வாய் திறக்கவில்லை
இப்படி மாறி மாறி அடுத்தவர்களை குறை சொல்லிக் கொண்டு இருக்கும் இந்த அதிமுகவிலேயே அமைச்சர் ஒருவர் ஊழலில் சிக்கி படாதபாடு பட்டு வருவதற்கு ஒருவரும் வாயே திறக்காமல் இருக்கிறார்கள். போன வருஷம் ஏப்ரல் 7-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு... ஆர்.கே.நகர் தொகுதிக்கு வழங்க ரூ.89 கோடி பணப்பட்டுவாடா பணம்... அதை எந்தெந்த அமைச்சர்களுக்கு பிரித்து வழங்குவது என்பதற்கான ஆதாரங்கள், பல கோடிகணக்கில் உள்ள சொத்துக்கான ஆவணங்கள்.. இவையெல்லாவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தது தெரிந்த விவகாரமே.

தலைவர்கள் கண்டனம்
அமைச்சர் விஜயபாஸ்கர் ரூ.20 கோடி லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் முதல், பாமக நிறுவனர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வரை சொல்லியாகி விட்டது. இந்த விவகாரத்தில் ஒருபடி மேலே போய், தமிழக அரசின் தலைமை செயலாளர், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விசாரணை நடத்துமாறு வருமான வரித் துறையே பரிந்துரைத்துள்ளது.

லோக் அயுக்தா என்னானது?
இவ்வளவு நடந்தும் அதற்கு உரிய பதில் அமைச்சர் தரப்பிலிருந்தோ, அரசு தரப்பிலிருந்தோ இன்னமும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கான லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்த பிறகும், அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட அந்த அமைப்பை அரசு இன்னமும்கூட ஏற்படுத்தவில்லை.

அமைச்சரின் ஊழல்
"அமைப்பு ஏற்படுத்தப்பட்டால் முதலில் நடவடிக்கை பாய்வதே அமைச்சர் விஜயபாஸ்கர் மீதுதான் இருக்கும், ஆனால் அப்படி நடந்தால் அவர் பலரையும் மாட்டி விட்டு விடுவார் என்தபால்தான் இந்த லோக் அயுக்தாவை அமைக்க அரசு தயங்குவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சரின் மீது ஊழல் குற்றச்சாட்டு புயல் வேகத்தில் கிளம்பி வருகிறது.

தங்களையே தொலைப்பார்களா?
ஸ்டாலினின் வளர்ச்சி... கமலஹாசனின் எழுச்சி... டிடிவி தினகரனின் திடமான பேச்சு.. என தமிழக அரசியல் வருகிற இடைத்தேர்தல்களை நோக்கி அடியெடுத்து வரும் வேளையில், அதிமுக அரசு இந்த ஊழல் புகாருக்கு என்ன பதில் சொல்ல போகிறது? ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றிக் கொள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்குமா? அல்லது அமைச்சரை காப்பாற்ற போய் தங்களையே அரசியல் களத்தில் தொலைத்துவிடுவார்களா? என பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications