போலீசாருக்கு ஆப்பு வைக்கும் வாட்ஸ்அப் வீடியோ – திருடன்-போலீஸ் விளையாட்டு அம்பலம்!
சேலம்: சேலத்தில் போலீசாருக்கு வேட்டு வைக்கும் வகையில் செல்போன் வாட்ஸ் அப்பில் சில நாட்களாக பரபரப்பான வீடியோ காட்சி ஒன்று பரவி வருகிறது.
சேலம் பகுதியில் இருந்து ஒருவர் செல்போனில் இக்காட்சிகளை அனுப்பி வைத்துள்ளார்..
18 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவன் உடம்பில் சட்டை எதுவும் இல்லாமல் அழுது கொண்டே இருக்கிறான். அவனை சுற்றி பலர் நின்று கொண்டு கேள்வி மேல் கேள்வியாக கேட்கிறார்கள். உன்னை திருடச்சொல்றது யாருடா? என்று ஒருவர் கேட்கிறார்.
இதற்கு பதில் அளிக்கும் சிறுவன் போலீஸ்காரங்க சார் என்று அப்பாவியாக கூறுகிறான்.
அதில், "சேலம் கொளத்தூர், அம்மாபேட்டை, பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை போலீசே திருடச் சொல்றாங் கண்ணா... தினமும் 5 மோட்டர் சைக்கிளையாவது நான் திருடிக் கொடுக்கணும். அவங்களே மோட்டார் சைக்கிள் யாருடையதுன்னு கண்டு பிடிக்கிற மாதிரி கண்டு பிடிச்சி, அதனை திருப்பிக் கொடுப்பாங்க.
அப்படி அதனை திருப்பிக் கொடுக்கும் போது மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் வாங்குவாங்க. இதில் அவங்க 4 ஆயிரத்து 500 ரூபாய் எடுத்துக்குவாங்க... எனக்கு 500 ரூபாய் தருவாங்க... என்று திடுக்கிடும் வாக்குமூலம் அளிக்கும் சிறுவன் கண்ணீர் மல்க தொடர்கிறான்.
தீபாவளிக்கு புது துணியும், மோட்டார் சைக்கிளும் வாங்கி தருவதாக சொல்லி இருக்காங்க. இதுவரை 20 மோட்டார் சைக்கிள் வரைக்கும் திருடியிருக்கேன் என்றும் அச்சிறுவன் கூறுகிறான்.
சேலம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி பிடிபட்டபோது கூட்டத்தில் இருந்து வில்லங்கமான வாலிபர் ஒருவர் சிறுவனின் வாக்கு மூலத்தை வீடியோவாக எடுத்து செல்போனில் பரவவிட்டுள்ளார். இதன் மூலம் திருட்டு வேலைக்கு சிறுவனை அமர்த்தி போலீசாரே திருடன்-போலீஸ் விளையாட்டு விளையாடி இருப்பது அம்பலமாகி உள்ளது.