ஜெ. மீண்டும் முதல்வராக பதவியேற்பு பணிகள் மும்முரம்- விரைவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் முதல் கட்டமாக விரைவில் அண்ணா தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த 11-ந் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீடு அமைந்துள்ள போயஸ் கார்டனில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இத் தீர்ப்பை தொடர்ந்து தமிழக முதல்வராக 5-வது முறையாக மீண்டும் ஜெயலலிதா எப்போது பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெறலாம் என்றும், அந்த கூட்டத்தில் ஜெயலலிதா அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகின.
ஆனால் பதவியேற்பு குறித்தோ எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது குறித்தோ எந்த விதமான தகவலும் அ.தி.மு.க. தரப்பில் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
இந்தநிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடனடியாக போயஸ் கார்டனுக்கு வருமாறு கட்சியின் தலைமை திடீரென்று அறிவுறுத்தியது.
வழக்கில் இருந்து வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக அமைச்சர்கள் காத்திருந்த நேரத்தில் இந்த உத்தரவு கிடைத்ததும் அவர்கள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று மதியம் 3 மணிக்கு போயஸ் கார்டனுக்கு விரைந்தனர்.
அங்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை ஜெயலலிதா தனியாக அழைத்து இண்டர்காமில் மட்டுமெ ஜெயலலிதா பேசினார்.
அதன் பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவராக போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு சென்றனர். கடைசியாக மாலை 5.30 மணியளவில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக தேர்ந்து எடுப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஒன்றிரண்டு நாட்களில் சென்னையில் நடைபெற இருக்கிறது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவர்னரை சந்தித்து பதவி விலகுவதற்கான கடிதத்தை வழங்குவார். வருகிற ஞாயிற்றுக்கிழமை ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க கூடும் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications