கந்து வட்டி புகாரில் அன்பு செழியனை அரெஸ்ட் செய்த அஸ்ரா கார்க்... மீண்டும் திரும்புமா 2011 வரலாறு?
கந்து வட்டி புகாரில் சிக்கியுள்ள பைனான்சியர் அன்பு செழியன் தலைமறைவாகியுள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு இதே புகாரில் கைதானார் அன்பு செழியன்.
Recommended Video

சென்னை: கந்து புகாரின் பேரில் அன்பு செழியனை கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை மாவட்ட எஸ்.பி அஸ்ரா கார்க் கைது செய்தார். அவர் மீது பல புகார்கள் இருந்தாலும் அரசியல் பலத்தால் வலம் வந்தார்.
அன்புசெழியன் கீழ்தரமாக பேசியதாலேயே நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. 2011ஆம் ஆண்டு போல மீண்டும் அன்பு செழியன் மீது நடவடிக்கை பாயுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள விரிச்சான்குளத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். சுந்தரா டிராவல்ஸ், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவர் மதுரை மாவட்ட எஸ்பி அஸ்ரா கார்க்கிடம் கடந்த 2011ஆம் ஆண்டு புகார் மனு அளித்தார்.

தயாரிப்பாளர் தங்கராஜ் புகார்
அந்த மனுவில், "நான் கடந்த 10 வருடங்களாக படதயாரிப்பு தொழில் செய்து வருகிறேன். கடந்த 2004-ல் பட தயாரிப்புக்காக மதுரை தெற்கு மாசிவீதியை சேர்ந்த சினிமா வினியோகஸ்தர் அன்புசெழியனிடம் ரூ.20 லட்சம் கடனாக வாங்கினேன். அப்போது அவர் ரூ.3 லட்சத்தை வட்டியாக எடுத்துக்கொண்டு ரூ.17 லட்சம் என்னிடம் கொடுத்தார். இந்த கடனை வாங்குவதற்காக எனது பெயரிலும், எனது மனைவி பெயரிலும் இருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் காசோலைகளையும் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து லட்சக்கணக்கில் பணம் செலுத்தி வந்தேன்.

சொத்துக்களை எழுதித் தரச் சொல்லி மிரட்டல்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்திருந்த சொத்து ஆவணங்களை பவர் எழுதி தரும்படி அன்புசெழியன் மிரட்டினார். அப்போது வாங்கிய கடனுக்கு உரிய தொகையை நான் செலுத்தி விட்டதாக அவரிடம் தெரிவித்தேன். அவர் நீ செலுத்தியது வட்டிதான், இன்னும் அசல் வரவில்லை என்று கூறி சொத்துக்குரிய பவரை எழுதி தரும்படி மீண்டும் மிரட்டினார். இதையடுத்து மதுரை துரைசாமி நகரைச் சேர்ந்த முரளி என்பவரது பெயரில் பவர் எழுதி மதுரை பீ.பி.குளத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு விற்பனை செய்து விட்டனர். இதனால் வாங்கிய கடன் ரூ.20 லட்சத்துக்கு, ரூ.1.5 கோடி தொகை கந்துவட்டி மூலம் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.

அஸ்ரா கார்க்கின் அதிரடி
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும்," என்று தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து எஸ்பி அஸ்ரா கார்க், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அன்புசெழியன் மற்றும் முரளி, ராமகிருஷ்ணன் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். ஆனால் சில நாட்களிலேயே ஜாமீனில் வெளிவந்து ஜம்பமாக சுற்றினார். அவர் மீது எந்த நடவடிக்கையும் பாயவே இல்லை.

சசிக்குமார் மைத்தனரின் சாவுக்குக் காரணம்
அன்புசெழியனின் அடாவடி செயலால் இப்போது சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அன்பு செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகுமார் உள்ளிட்ட உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். ஆளுங்கட்சி நபர்களை கையில் வைத்துள்ள அன்பு செழியன் மீது நடவடிக்கை பாயுமா? பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications