அந்த 500 ரூவா நோட்டு தமிழ் நாட்டுக்கு எப்போ வரும்?
சென்னை: பண ஒழிப்புத் திட்டம் அறிவிக்கப்பட்ட இரண்டே நாட்களில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துவிடும் என மத்திய அரசு அறிவித்தாலும், இரண்டு வாரங்களான பிறகும் கூட 500 ரூபாய் நோட்டு வந்தபாடில்லை.
இன்று நாட்டில் சிலவும் பணத் தட்டுப்பாடு, சில்லறைப் பிரச்சினை அனைத்துக்குமே முக்கிய காரணம், புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வராததுதான். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் புதிய 500 ரூபாய் நோட்டுக்களே வரவில்லை.

மும்பை, டெல்லி போன்ற சில பகுதிகளில் மட்டும் சில ஏடிஎம்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்ததாகக் கூறப்பட்டது. அதுவும் சில நாட்களுக்குத்தான்.
இந்த நிலையில் புதிய ரூ.500 நோட்டுகள் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் புழக்கத்துக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்துக்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான புதிய ரூ.500 நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ரிசர்வ் வங்கியின் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பணம் சென்னை ரிசர்வ் வங்கியை வந்தடைந்துள்ளதாகவும், அவை வங்கிக் கிளைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications