500 ரூபாய் நோட்டு எப்போது கிடைக்கும்.. அதுவரை என்ன செய்யவது?
ரிசர்வ் வங்கியிடம் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் போதிய அளவு இல்லை என்பதால் 500 ரூபாய் நோட்டுக்கான தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக வெளியிடப்படாத நிலையில், 500 ரூபாய் நோட்டுக்கான தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. புதிய நோட்டுக்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்து மத்திய அரசு இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. இதனால் எதிர் வரும் வாரங்களில் 500 ரூபாய் நோட்டுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவித்த பிறகு மக்களின் அன்றாட தேவைக்கான சில்லறை நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதில் மத்திய அரசு தாமதித்து வருகிறது. இதனால் பழைய நோட்டுக்களை மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, சில்லறை நோட்டுக்கள் கிடைக்காமல் பணப் புழக்கம் முடங்கி போயுள்ளது.
இதனால், மக்கள் பெரும் அவதியில் உள்ளனர். எந்த இடத்திலும் சில்லறை நோட்டுக்கள் கிடைக்காமல் மக்கள் ஏடிஎம் மையங்களை தேடி அலைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பிரச்சனை எப்போது தீரும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ. 500 நோட்டு இல்லவே இல்லை
500 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு தமிழ்நாட்டிற்கு இன்னும் வரவில்லை. எந்த ஏடிஎம் மையங்களிலும் வங்கிகளிலும் 500 ரூபாய் நோட்டே இல்லை. இதனால் 2000 ரூபாய் கொடுத்து பொருட்களை வாங்குபவர்களுக்கு 500 ரூபாய் நோட்டுக்களை சில்லறையாக கொடுக்க முடியாமல் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
100 நோட்டுக்கும் அதே கதிதான்
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் 100 மற்றும் 50 ரூபாய் என சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களும் ரிசர்வ் வங்கியிடம் போதிய அளவில் இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சில்லறை நோட்டுக்களுக்கான தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ரூபாய் நோட்டுக்களை தேடி
இன்றும் பல ஏடிஎம் இயந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டு மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. 100 ரூபாய் நோட்டுக்கள் வைக்கப்படுவதில்லை. இதனால் மக்களுக்கு சில்லறை நோட்டுக்களை எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 2000 ரூபாய் நோட்டை எடுப்பதற்கே கூட 10 ஏடிஎம் மையங்களுக்கு சென்று அலைந்த பின்னர்தான் ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் கிடைக்கிறது.
எப்போதுதான் கிடைக்கும் ரூ.500 நோட்டு
நாளை அல்லது நாளை மறுநாள் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் தமிழகத்திற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் அது பொதுமக்களுக்கு போதிய அளவில் இருக்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது. அதனை எடுக்க எத்தனை மணி நேரம் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காக்க வேண்டும் என்பதும் தெரியவில்லை.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இதுவரை வங்கிகளுக்கு புதிய 500 ரூபாய் நோட்டு கிடைக்காத நிலையில், பணத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. 500 ரூபாய் நோட்டுக்காக பொதுமக்கள் அலைந்து திரிவது மேலும் அதிகரிக்கும் என்று வங்கி ஊழியர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது. ரூபாய் நோட்டுக்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகள் நீங்க குறைந்த பட்சம் இன்னும் 6 மாதங்களாவது ஆகும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.