அதிமுகவினர் தேடி வந்த நிலையில் சென்னைக்குத் திரும்பிய தினகரன்!
டிடிவி தினகரன் டெல்லி சென்றதாக கூறப்பட்டாலும் அவர் எங்கே சென்றிருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது.
சென்னை: அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எங்கே சென்றார் என்று அதிமுகவினர் தேடிய நிலையில் அவர் உடனடியாக சென்னை திரும்பியுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ், டிடிவி தினகரன் அணி என மூன்று அணிகள் உள்ளது வெளிப்படையாக தெரிகிறது. கண்ணுக்கு தெரியாமல் இன்னும் எத்தனை அணிகள் இருக்கிறதோ? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈபிஎஸ் பக்கம் இருக்கிறார். அதே நேரத்தில் தினகரனுக்கு ஆதரவாகவும் பேசுகிறார்.
திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன், கட்சியில் ஆக்டிவாக செயல்பட விரும்பினார். ஆனால் அதற்கு அமைச்சர்கள் சிலர் முட்டுக்கட்டை போட்டனர். விடுவாரா தினகரன், பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்த கையோடு தனது ஆதரவு எம்எல்ஏக்களை வந்து பார்க்கச் சொல்லி எடப்பாடி பழனிச்சாமி அணிக்கும், ஓபிஎஸ் அணிக்கும் கிலியை ஏற்படுத்தினார்.

ஓபிஎஸ் அணி ஆச்சரியம்
நம்ம பக்கம் 12 பேர்தான் வந்தாங்க. அங்கே 32 பேர் போயிருக்காங்களே என்று ஓபிஎஸ் அணியினரே பேசும் அளவிற்கு அடுத்தடுத்து எம்எல்ஏக்களை வந்து பார்க்க வைத்து டிவியில் பேட்டி கொடுக்க வைத்தார் தினகரன். எல்லாம் 2 நாள்தான். அதன்பிறகு எம்எல்ஏக்கள் யாரையும் தனது வீட்டுப்பக்கம் வரவேண்டாம் என்று கூறிவிட்டார்.

அமைச்சர் பதவி
தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 4 பேருக்கு அமைச்சர் பதவியில் இடம் தரவேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் இருந்து 4 பேரை கழற்றி விட வேண்டும் என்பதான் தினகரனின் உத்தரவு. ஆனால் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. இதனையடுத்தே ஆட்டம் காட்டும் வகையில் எம்எல்ஏக்களை வந்து பார்க்கச் சொல்லி பேட்டி தரச்சொன்னார் தினகரன்.

சைலண்ட் ஆன தினகரன்
டெல்லியில் இருந்து வந்த போன்தான் தினகரனை சைலண்ட் ஆக்கியது என்கின்றனர். திடீரென்று நேற்று தனது ஆதரவாளர்கள் யாருக்கும் சொல்லாமல் டெல்லி கிளம்பி போய்விட்டார் என்று சென்னை விமான நிலைய செய்தியாளர்கள் செய்தி கொடுத்தனர்.

கேரளா பயணமா?
திஹார் சிறை டென்சனை மறக்க அவர் கேரளாவிற்கு ஓய்வெடுக்கப் போயிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை சமாதானப்படுத்தும் வகையில் முக்கிய நபரைப் பார்த்து பேச போனார் என்கின்றனர்.

தினகரன் எங்கே?
அதெல்லாம் இல்லை, தினகரன் எங்கே சென்றிருக்கிறார் என்பதே பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அவர் எங்கே? யாரை பார்க்கப் போயிருக்கிறார் என்பது அவரது ஆதரவாளர்களுக்கு கூட தெரியாது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு
தினகரன் எங்கே சென்றார் என்று அதிமுகவினர் தேடிய நிலையில் அவர் இன்று பிற்பகலில் சென்னை திரும்பினார். அடையாறு இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications