மீன்களில் பிணத்தை பதப்படுத்த பயன்படுத்தும் ஃபார்மலின் கலக்கப்படுகிறதா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
மீன்களில் பிணத்தை பதப்படுத்த பயன்படுத்தும் ஃபார்மலின் கலக்கப்படுவதாக வெளியான தகவலை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார்.
Recommended Video
சென்னை: மீன்களில் பிணத்தை பதப்படுத்த பயன்படுத்தும் ஃபார்மலின் கலக்கப்படுவதாக வெளியான தகவலை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார்.
மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க மனித உடலை பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஃபார்மலின் ரசாயனம் பயன்படுத்தப்படுவதாக கூறி கேரள அரசு தமிழக மீன்களுக்கு தடைவிதித்துள்ளது.
நேற்று கும்பகோணத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பார்மலில் வேதிப்பொருள் பூசப்பட்ட 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஃபார்மலின் ரசாயனம் கேன்சரை உண்டாக்க கூடியது என்பதால் மக்கள் மத்தியில் இந்த விவகாரம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
திட்டமிட்டு வதந்தி
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, மீனவர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் மீன்களில் ரசாயனம் உள்ளதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது.
ஆய்வு பிறகே விற்பனை
மீன்கள் பெறப்படும் இடத்தில் ஆய்வு செய்யப்பட்டே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வேகமாக வளரக்கூடிய மீன்களை வளர்த்து வாழ்வாதாரம் பொருளாதாரத்தை பெருக்க ஊக்குவிக்கப்படுகிறது.
அரசு உறுதிப்படுத்தும்
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலேயே துறைமுகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரசாயன கலப்பற்ற மீன்கள் விற்கப்படுவதை அரசு 100 சதவீதம் உறுதிப்படுத்தும்.
ஃபார்மலின் பயன்படுத்தக்கூடாது
தரமான மீன்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மீன்களை பயன்படுத்த ஃபார்மலின் என்ற ரசாயனத்தை பயன்படுத்த கூடாது.
உரிய நடவடிக்கைக்கு உத்தரவு
வெளிமாநிலங்களில் இருந்து வரும் மீன்களையும் சோதனையிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஃபார்மலின் ரசாயனம் கலந்த மீன்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் நம்பவேண்டாம்
உள்நாட்டு மீன் உற்பத்தியை பொறுத்தவரை இயற்கையை நம்பி தான் உள்ளோம். எனவே பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக கூறுவதை மக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.