"வந்தேமாதரம்" எந்த மொழியில் எழுதப்பட்டது? தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி
"வந்தே மாதரம்" பாடல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதா அல்லது வங்க மொழியில் எழுதப்பட்டதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: வந்தேமாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என ஆசிரியர் தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி தொடர்பான வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29 மற்றும் ஏப்ரல் 30ம் தேதிகளில் நடந்தது. சுமார் 7 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர்.

சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட இத்தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 1ம் தேதி வெளியானது. இதில் சுமார் 4.93 லட்சம் பட்டதாரிகள் 150க்கு 90 என்ற தேர்ச்சி மதிப்பெண்ணை எடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ளனர். இதில் ஏராளமானோர் அறிவியல் மற்றும் கணித பாடத்தில் தோல்வி அடைந்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இத்தேர்வில் வந்தே மாதரம் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. அதற்கு சமஸ்கிருதம் மற்றும் வங்க மொழி இரண்டிலும் குழப்பம் இருந்ததால் தேர்வு எழுதிய ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், வந்தே மாதரம் பாடல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதா? அல்லது வங்க மொழியில் எழுதப்பட்டதா ? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு பின்னர் வங்க மொழியில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து வந்தே மாதரம் எந்த மொழியில் எழுதப்பட்டது என ஜூலை 11ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications