விட்டதைப் பிடிக்க ரெடியா? சடுகுடு ஆடும் ஓபிஎஸ்.. ‘விடாக்கண்டன்’ எடப்பாடி.. கர்நாடகாவில் பரபர மூவ்!
சென்னை : கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாஜக கூட்டணியில் கர்நாடகா தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளில் ஓபிஎஸ் அணியினர் ஈடுபட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இருவரும் போட்டியிட திட்டமிட்டுள்ளதால், கர்நாடகா தேர்தலிலும் இரட்டை இலை சின்னம் சிக்கலுக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவைக் கூட்டி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி, எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்தது முதலாகவே ஓபிஎஸ் அணியினர் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் பல வழக்குகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சாதகமாகவே தீர்ப்புகள் வந்துள்ளன. இதனால், ஈபிஎஸ் அணியின் கையே ஓங்கியுள்ளது. சமீபத்தில் ஐகோர்ட், ஓபிஎஸ் தரப்பினரின் மனுக்களை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார் எடப்பாடி பழனிசாமி. இதை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார் ஓபிஎஸ்.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் : இதுஒருபுறமிருக்க, கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் விரைவில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், அதிமுகவினரும் கர்நாடக சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவிற்கு கர்நாடகாவில் நல்ல செல்வாக்கு உண்டு. கர்நாடகாவில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏக்களும் இருந்துள்ளனர். பெங்களூர் புகழேந்தியை கர்நாடக மாநில அதிமுகவின் பொறுப்பாளராக ஜெயலலிதா நியமித்திருந்தார்.
ஓபிஎஸ் பரபர மூவ் : தற்போது புகழேந்தி ஓபிஎஸ் ஆதரவாளராக இருப்பதால் கர்நாடகா தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. ஓபிஎஸ் அணியினர் கர்நாடகாவில் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைசூர், பெங்களூர், கோலார் தங்கவயல் போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார் ஓபிஎஸ்.
சமீபத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை விட என் மனைவி மற்றும் தாய் பல மடங்கு வலிமை வாய்ந்தவர்கள் எனக் கூறிய விவகாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி, கர்நாடகாவில் தனக்கு இருக்கும் செல்வாக்கு குறித்தும் அம்மாநிலத்தில் உள்ள தலைவர்களுடன் தனக்கு இருக்கும் பழக்கவழக்கங்கள் குறித்தும் படங்களைக் காட்டி பேசி இருந்தார். ஜெயலலிதாவை தவறாகப் பேசியது குறித்து கர்நாடகத்தில் செய்தி சென்றால் கர்நாடகாவில் பாஜக தோற்றுவிடும் என புகழேந்தி விமர்சித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி பிளான் : தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி - பாஜக தலைவர் அண்ணாமலை இடையே பனிப்போர் நிலவி வருகிறது. பாஜக - அதிமுக இரு தரப்பிலும் பாஜக கூட்டணி தொடரும் என்றே கூறி வந்தாலும், அண்ணாமலை பிடிகொடுக்காமலேயே பேசி வருகிறார். அண்ணாமலை, கர்நாடகா தேர்தல் இணை பொறுப்பாளராகவும் பாஜகவில் உள்ளார். இந்தச் சூழலில் கர்நாடகாவில் ஓபிஎஸ் அணியினர் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து பாஜகவுடனான தங்கள் உறவை பலப்படுத்திக்கொள்ள விரும்புவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். 3 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி அணியினர் போட்டியிட பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், அதிமுகவில் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் 16 ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பலம் : தமிழ்நாடு அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் கர்நாடகத் தேர்தலிலும் தங்கள் பலத்தை நிரூபிக்க போராடவுள்ளானர். ஓபிஎஸ் அணியின் புகழேந்தி, கர்நாடகாவில் ஓபிஎஸ் அணியினரின் பலத்தை நிரூபிக்க முழுவேகத்தில் களமிறங்கி உள்ளாராம்.

ஒருவேளை கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் இரு தரப்பும் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற சிக்கலும் ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது நடந்தது போலவே, இரட்டை இலை சின்ன விவகாரம் நீதிமன்றத்திற்குச் செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருப்பதால், இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமி ஏ ஃபார்ம், பி ஃபார்மில் கையெழுத்துப் போட்டால் செல்லுமா என்பதற்கு தேர்தல் ஆணையமே விடையளிக்கும்.
அதிமுக எம்.பி தம்பிதுரை நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது கர்நாடகா தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆக, பாஜக எடுக்கும் முடிவு என்ன? கர்நாடகாவில் பலத்தை நிரூபிக்கப்போவது ஓபிஎஸ்ஸா, ஈபிஎஸ்ஸா என இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.












Click it and Unblock the Notifications