தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் யார்?
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பான விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், யார் என்பது குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை, இந்த ஒரு நபர் விசாரணை கமிஷனின் தலைவராக நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு
நீதிபதி அருணா ஜெகதீசன், பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை அதில் ஒன்று. ஜெயலலிதா மீதான வழக்குகள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. அங்கு நீதிபதி குன்ஹா முன்னிலையில் வழக்கு நடந்தது.
ஜெயலலிதா வழக்கு கம்பெனிகள்
இந்த காலகட்டத்தில், இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கம்பெனிகளை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அருணா ஜெகதீசன் உத்தரவிட்டார். இது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வேளச்சேரி என்கவுண்டர்
சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் என கூறி 5 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் புகழேந்தியால் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தீர்ப்பு வழங்கியிருந்தார். இதனால் மனுதாரர் தரப்பு அதிருப்தியடைந்தது.
சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு
இதுபோன்ற சூழ்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும் நீதி விசாரணை தலைவராக அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே தூத்துக்குடி எம்.பி. சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில், அரசு நடத்தும் விசாரணையில், உண்மை வெளியே வராது என கூறியுள்ளார்.