ரவுடி பத்தர் செல்வம் கொலைக்கு பழியாக திமுக பிரமுகர் செல்வராஜ் படுகொலை?
விழுப்புரம்: ரவுடி கோஷ்டிகள் வெட்டி சாய்த்துக் கொள்வது என்பது விழுப்புரத்தில் தொடர் கதையாகி வருகிறது.. கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ரவுடி பத்தர் செல்வம் கொலைக்கு பழியாகவே இன்று காலை வாக்கிங் போன திமுக நகர செயலர் செல்வராஜ் இன்று காலை வெட்டி கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மின்னல் ராஜா, ஆர்கே சிவா, புஷ்பராஜ், பத்தர் செல்வம்... விழுப்புரத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடிகள்...
இதில் ஆர்கேசிவாவின் தம்பி அறிவழகன்தான் கடந்த ஆண்டு பூங்கா ஒன்றில் விளையாடிவிட்டு திரும்பிய போது பத்தர் செல்வத்தை போட்டுத் தள்ளினார். அத்துடன் தலையை துண்டித்து 'காந்தி' சிலை முன்பாக வைத்து விட்டு போலீசில் சரணடைந்தார்.
மாமூல் கேட்டு மிரட்டல்
இருப்பினும் பத்தர் செல்வத்தின் கொலையின் போது திமுக நகரச் செயலர் செல்வராஜ் பெயரும் அடிபட்டது. செல்வராஜிடம் பெரும் தொகை ஒன்றை பத்தர் செல்வம் கேட்டு மிரட்டி வந்திருக்கிறார்.
செட்டில்மெண்ட்
ஆனால் செல்வராஜ் தர மறுத்து பத்தர் செல்வத்துக்கு பயந்து சில மாதம் தலைமறைவாகவும் இருந்திருக்கிறார். பின்னர் ஒருவழியாக 'சில பெருந்தலைகள்' முன்னிலையில் பத்தர் செல்வத்துக்கு கப்பம் கட்டினாராம் செல்வராஜ்.
அடுத்தடுத்து கொலைகள்
இந்த கோபத்தில்தான் பத்தர் செல்வத்தை அறிவழகனை வைத்து செல்வராஜ் போட்டிருக்கலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று செல்வராஜ் வாக்கிங் சென்ற போது வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணை
பத்தர்செல்வத்தின் படுகொலைக்கு பழிவாங்கவே செல்வராஜ் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.