ஆளுநரின் ஆய்வு குறித்து கவலைப்பட வேண்டியவர்களே கவலைப்படவில்லை.. தமிழிசை நச்!
ஆளுநரின் ஆய்வு குறித்து கவலைப் பட வேண்டியவர்களே கவலைப்படவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை: ஆளுநரின் ஆய்வு குறித்து கவலைப் பட வேண்டியவர்களே கவலைப்படவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதும் கோவையில் ஆய்வு நடத்தியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால் தமிழக அமைச்சர்கள் ஆளுநரின் ஆய்வுக்கு வரவேற்பு தெரிவித்தனர். ஆளுநரின் ஆய்வில் எந்த தவறும் இல்லை என்ற அவர்கள், ஆய்வு செய்தால்தான் தமிழகத்திற்கான தேவையை அறிய முடியும் என்றனர்.
அக்கறை இல்லாதவர்கள்
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆளுநரின் ஆய்வை விமர்சனம் செய்பவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் என அவர் குற்றம்சாட்டினார்.
ஆளும்கட்சிக்கு பக்கபலமாக இருக்கும்
மக்கள் நலனுக்காக குடியரசுத் தலைவர் ஆய்வு மேற்கொண்டால் அதனை வரவேற்போம் என்றும் தமிழிசை கூறினார். ஆளுநரின் ஆய்வு ஆளும்கட்சிக்கு பக்கபலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்டாலின் சொல்லும் அளவுக்கு..
ஆளுநர் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே ஆய்வு நடத்தினார் என்றும் அவர் கூறினார். ஸ்டாலின் நிறுத்தச் சொல்லும் அளவுக்கு ஆளுநரின் ஆய்வு மக்கள் விரோதப் போக்கு அல்ல என்றும் தமிழிசை கூறினார்.
கவலைப்படவில்லை..
ஆளுநரின் ஆய்வு குறித்து கவலைப்பட வேண்டியவர்களே கவலைப்படவில்லை என்றும் தமிழிசை கூறினார். ஆளுநரின் ஆய்வு குறித்து கவலைப்பட தேவையில்லாதவர்கள் எல்லாம் கவலைப்படுவதாகவும் அவர் சாடினார்.
ஜெ. வியந்திருப்பார்...
யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். வரமான வரித்துறை ரெய்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் சசிகலா குடும்பத்தினரை கண்டு வியந்திருப்பார் என்றும் அவர் கூறினார்.