தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க நீங்கள் யார்?.. சு.சாமியை வறுத்தெடுத்த சுப. உதயகுமாரன்!
காவேரி பிரச்சனை பற்றி மோசமான கருத்து தெரிவித்த பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சாமிக்கு அணுஉலை எதிர்ப்பு போராளி சுப.உதயகுமாரன் பதில் அளித்துள்ளார்.
சென்னை: காவேரி பிரச்சனை பற்றி மோசமான கருத்து தெரிவித்த பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணியன் சாமிக்கு அணுஉலை எதிர்ப்பு போராளி சுப.உதயகுமாரன் பதில் அளித்துள்ளார். தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க நீங்கள் யார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தற்போது காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை உச்சத்தை அடைந்து இருக்கிறது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் கேட்டு குரல் கொடுத்து களத்தில் இறங்கி உள்ளனர். மத்திய பாஜக அரசு கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக மக்களின் கருத்துக்கு எதிராக பேசிவரும் சுப்பிரமணியன் சாமி டிவிட்டரில் ''தமிழக மக்களுக்கு குடிக்கவும் பயன்படுத்தவும் தண்ணீர் வேண்டும் என்றால் கடல் நீரை தூய்மை செய்து பயன்படுத்த நானே ஏற்பாடு செய்கிறேன். அதைவிட்டுவிட்டு உங்களுக்கு காவிரி தான் வேண்டும் என்றால் விழுந்து புரண்டு கண்ணீர் விடுங்கள். '' என்று கிண்டல் செய்துள்ளார்.
If Tamil people want adequate drinking and field water I can arrange through sea water desalination plants. If Cauvery water then howl&cry
— Subramanian Swamy (@Swamy39) April 1, 2018
இதற்கு தற்போது சுப.உதயகுமாரன் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் தனது பேஸ்புக் போஸ்ட்டில் ''தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க நீங்கள் யார் சுப்பிரமணியன் சாமி? நீங்கள் யாருமே கிடையாது. நாங்கள் தமிழர்கள், எங்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம், எங்கள் உரிமைக்கு நாங்கள் போராடிக் கொள்வோம். நீங்கள் உங்கள் வாயை மூடிக்கொண்டு, வேலையை பாருங்கள். குறைகுடம் கூத்தாடும்!'' என்றுள்ளார்.