Arani: சில்க் சிட்டி ஆரணி சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் யார்? ரேஸில் 4 பேர்!
ஆரணி: ஆரணி சட்டசபை தொகுதியில் வரும் தேர்தலில் அதிமுக சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ் செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி என 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் முக்கியமானது ஆரணி. இது பட்டு நகரம் (Silk City), அரிசி ஆலைகள் நிறைந்த நகரம். இங்கு விவசாயமும் பிரதானம். இந்த ஆரணியில்தான் விஜயநகர மன்னன் வாழ்ந்த அரண்மனை எஸ்.வி. நகரத்தில் உள்ளது.

ஆரணியம் என்றால் காடு, அப்படி வனங்கள் நிறைந்த பகுதிதான் ஆரணி என பெயர் மாற்றலானது. ஆரணி ஒரு வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நகரம் எனலாம்.
அதிமுக சார்பில் யார் வேட்பாளர்
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆரணியில் அதிமுக சார்பில் யாருக்கு சீட் வழங்கப்படும் என்பதை பார்க்கலாம்.
யார் பெரும்பான்மை
ஆரணியை பொருத்தவரை முதலியார் சமூகத்தினரும் வன்னியர்களும் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த தொகுதியில் பட்டியலினத்தவர்கள், யாதவர்கள் என வசித்தாலும் மெஜாரிட்டியாக முதலியார், வன்னியர்கள் இருப்பதால் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இந்த சமூகத்தினர் உள்ளனர்.
திமுக அதிமுக
இதனால் இதுவரை திமுக, அதிமுக என மாறி மாறி போட்டியிட்ட போதிலும் முதலியார் அல்லது வன்னியர் சமூகத்தினருக்கே கட்சி தலைமைகள் வாய்ப்புகளை வழங்கி வந்தது.
ஆரணி அதிமுகவின் கோட்டை
ஆரணியில் 7 முறை அதிமுகவும் 5 முறை திமுகவும் வென்றுள்ளது. 2011 ஆம் ஆண்டு மட்டும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக வென்றது.
எஃகு கோட்டை
அதன் பிறகு 2016, 2021 ஆகிய தேர்தல்களில் அதிமுகவே வென்றது. 2011 இல் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றால் தொடர்ந்து 3 முறை அதிமுகவே வென்றது என சொல்லலாம்.எனவே ஆரணி அதிமுகவின் எஃகு கோட்டை.
சேவூர் ராமசந்திரன்
தற்போது வர இருக்கும் ஆரணி சட்டசபைத் தேர்தலில் தற்போதைய எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தனக்கு சீட் அளிக்க வேண்டும் என கேட்டு வருகிறாராம்.

ஜெயசுதா
போளூர் முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய திருவண்ணாமலை மத்திய
மாவட்ட செயலாளராகவும் உள்ள எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் அதிமுக சார்பில்
போளூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் அவரோ தொகுதி மாற விரும்புகிறார். ஆரணி தொகுதியை கேட்டு வருகிறாராம்.

ஜிவி கஜேந்திரன்
அது போல் ஆரணி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஜி.வி. கஜேந்திரன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அப்போது கூட்டணி பலம் இல்லாததால் இவர் தோற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் தற்போது அதிமுகவில் அன்புமணி பாமக இருப்பதால் வன்னியர்கள் அதிகம் வசிக்கும் ஆரணி தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதால் தனக்கு இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என அவரும் எடப்பாடி பழனிசாமியை நெருக்கி வருகிறாராம். கஜேந்திரன் ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ளார்.

பாரி பாபு
இந்நிலையில் அம்மா பேரவை மாவட்ட செயலாளராக உள்ள "பாரி பேக்கரி" பி.பாபு , கடந்த 50 வாரங்களாக திண்ணை பிரச்சாரம் நடத்தி வருகிறார்.இவரும் ஆரணி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தற்போது ஆரணி நகராட்சி துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

யாருக்கு வாய்ப்பு
இப்படி சேவூர் எஸ்.இராமச்சந்திரன், போளூர் ஜெயசுதா, ஜி.வி.கஜேந்திரன், பாரி பி.பாபு ஆகிய 4 பேரும் தங்களுக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரி வருகிறார்கள். இவர்களில் யாருக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications