அதிமுக இணைப்பு முயற்சிகள் டமாலுக்கு காரணமே இவர்தான் என்றால் நம்புவீர்களா?
அதிமுக இணைப்பு முயற்சிகள் தோல்விக்கு காரணமே ஓபிஎஸ் அணி தலைவர்கள்தான் என கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக கோஷ்டிகள் இணைப்பு முயற்சிகள் முறிந்து போனதன் பின்னணியில் ஓ. பன்னீர்செல்வம் அணியில் அரங்கேறிய 'உள்குத்துகள்'தான் காரணம் என கூறப்படுகிறது.
சசிகலா சிறைக்குப் போன நிலையில் அதிமுகவில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார் தினகரன். ஆனால் தினகரன் மீதான ஃபெரா வழக்குகளின் விசாரணை சூடுபிடித்தது. அத்துடன் இந்திய தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்ததாக அதிரடியாக ஒரு வழக்கும் போடப்பட்டது.
தினகரன் அரசியலில் ஆட்டம் போடுவதை சகிக்க முடியாத டெல்லியின் திருவிளையாடல்கள்தான் இவை என தினகரனுக்கு உணர்த்தி வந்தார் தம்பிதுரை. ஆனாலும் தம்மால் எதுவும் செய்ய முடியும் என தெனாவெட்டாகத்தான் இருந்தார் தினகரன்.
திவாகரனின் நாடகம்?
அதேநேரத்தில் தினகரனை ஓரம்கட்டி வைக்க சசிகலா குடும்பத்தினர் இன்னொரு பக்கம் முயற்சித்துக் கொண்டிருந்தனர். இதன் ஒரு பகுதியாகவே அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தினகரன் சார்ந்த குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர். அத்துடன் இரட்டை இலை சின்னத்தை மீட்க ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை எனவும் அறிவிக்கப்பட்டது.
ஹேப்பி ஓபிஎஸ்
முதல்வர் எடப்பாடி தொடங்கி அனைத்து அமைச்சர்களின் ஊழல் ஜாதகத்தை வைத்திருக்கும் டெல்லியின் நெருக்கடியால்தான் இப்படி எடப்பாடி கோஷ்டி இறங்கிவந்தது. ஓபிஎஸ்ஸும் அப்பாடா நமக்கு எப்படியும் முதல்வர் பதவியை டெல்லி வாங்கிக் கொடுத்துவிடும் என நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
ஓபிஎஸ் மீது சந்தேகம்
அதேநேரத்தில் தமக்கு மட்டுமே பதவி கிடைத்தால் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டாரோ ஓபிஎஸ் என பொன்னையன், கேபிமுனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் உள்ளிட்டோர் சந்தேகப்படவும் தொடங்கினர். இதையடுத்தே ஒப்புக்கு சப்பாக ஓபிஎஸ்-ம் நிறைவேறாது எனத் தெரிந்தே ஏகப்பட்ட நிபந்தனைகளை அள்ளிவிட்டிருக்கிறார்.
இதுதான் ஓபிஎஸ் கணக்கு
ஏனெனில் அதிமுகவில் இருந்து பதவியோடு வெளியே போனது ஓபிஎஸ்-ம் மாஃபா பாண்டியராஜனும் மட்டுமே. மற்ற எம்.எல்.ஏக்களும் சரி... தற்போது ஓபிஎஸ்-க்காக தொண்டை கிழிய பேசுகிற பெருந்தலைகளும் சரி... ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்டு மூலையில் முடங்கிக் கிடந்தவர்கள்..அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருந்தவர்கள்.. அவர்களுக்கு நிச்சயம் பதவி கொடுக்க யாரும் முன்வரமாட்டார்கள்.. அவர்களுக்காக பேசுவதும் சரியில்லை என்பது ஓபிஎஸ் கணக்கு.
விட்டால் தொடர்ந்தும் ஜீரோதான்
அதேநேரத்தில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியாவது அதிமுகவில் வெயிட்டான பதவிகளுக்கு போய்விடனும்... இல்லையெனில் மறுபடியும் ஜீரோவாகிவிடுவோம் என்பதுதான் ஓபிஎஸ் அணியில் உள்ள பெருந்தலைகளின் எண்ணம். இதனால்தான் பேச்சுவார்த்தையே நடைபெறாத வகையில் நெருக்கடி தரும் நிலைப்பாட்டை ஓபிஎஸ் கோஷ்டி எடுத்திருப்பதாகவே கூறப்படுகிறது.