ஜெ. வார்டு மாற்றத்தை அறிக்கையாக அப்பல்லோ மருத்துவமனை உடனே வெளியிடாதது ஏன்?
ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதை அப்பல்லோ மருத்துவமனை தாமதமாக உறுதி செய்துள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதை இன்று உறுதி செய்திருக்கிறார் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி. ஆனால் இதனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை மூலம் அப்பல்லோ மருத்துவமனை உடனே அறிவிக்காதது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அப்பல்லோ மருத்துவமனையில் 2 மாத காலமாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுத்து வருகிறார். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை முதலில் வெளியிட்ட அறிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. அந்த அறிக்கைகளில் உண்மைகள் மறைக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தன.
பின்னர் சில வாரங்கள் கழித்தே அப்பல்லோ மருத்துவமனை ஜெயலலிதாவின் உடல்நிலையில் என்ன பாதிப்பு என்பதை விவரித்தது. இதனைத் தொடர்ந்து லண்டன், சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் திடீரென கடந்த வாரம் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல்கள் பரவின. ஆனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக மட்டுமே கூறப்பட்டது. இந்த தகவலை வைத்து அதிமுகவினரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் அப்பல்லோ மருத்துவமனையானது அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்காமலே இருந்தது. இதனால் ஜெயலலிதா உண்மையிலேயே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டாரா? என்ற கேள்வியும் எழுந்தது. இந்த கேள்விக்கு விடை தரும் வகையில் இன்று சென்னை தரமணியில் செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு சாதாரண வார்டில் சிகிச்சை தரப்படுகிறது என கூறியிருந்தார்.
இந்த விவரத்தை இத்தனை நாள் அதிகாரப்பூர்வமாக அறிக்கையாக அப்பல்லோ மருத்துவமனை ஏன் சொல்லாமல் இருந்தது? இன்று மட்டும் திடீரென செய்தியாளர்களை அழைத்து அப்பல்லோ பிரதாப் ரெட்டி உறுதி செய்து கூறுவது ஏன்? என்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் எழவே செய்கின்றன.