தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏன் அமல்படுத்த முடியாதாம்?: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: குஜராத்தில் சாத்தியம் ஆகும்போது தமிழகத்தில் ஏன் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகி உயிரிழப்பு ஏற்படும் என்பதால் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என சட்டசபையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சுக்கு பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
குஜராத்தை போன்று தமிழகத்திலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். குஜராத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தியிருக்கையில் தமிழகத்தில் மட்டும் ஏன் அதை அமல்படுத்த முடியாது?
நல்லவற்றை உதாரணமாக எடுத்துக் கொண்டு தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என்ற நத்தம் விஸ்வநாதனின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்றார்.