எதுவும் தரலை... எதுவும் கிடைக்கலை... தீபக் பொசுக்கென பொங்கியது இதற்குதானாம்... பரபர பின்னணி
டிடிவி தினகரனுக்கு எதிராக தீபக் தீடீரென பொங்கியதற்கான பரபர காரணங்களை அடுக்குகிறது அதிமுக வட்டாரங்கள்.
சென்னை: அதிமுக துணைப் பொதுச்செயலராகிவிட்ட டிடிவி தினகரனுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் திடீரென பொங்கி போர்க்கொடி தூக்கியதன் பின்னணி தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா முகாமில் இருந்த தீபக் இன்று திடீரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளராகிவிட்டார். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் பங்களா தங்களுக்கே சொந்தம்; ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் தேவை; டிடிவி தினகரன் தலைமையை ஏற்க முடியாது என்றெல்லாம் தீபக் பொங்கிவிட்டார்.
இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே சசிகலா கட்டுப்பாட்டுக்குப் போனவர் தீபக்.

வாக்குறுதி கொடுத்த சசி
அவரை துணைக்கு வைத்துக் கொண்டு ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளை சசிகலா செய்தார். சசிகலாவையும் அத்தை என்றே கூறி வந்தார். தீபக்குக்கு குறிப்பிட்ட தொகையும் கட்சிப் பதவியும் தரப்படும் என்பதுதான் முதலில் தரப்பட்ட வாக்குறுதி.

காத்திருப்பு
பின்னர் ஓபிஎஸ் விவகாரம் வெடித்தபோது முதல்வர் பஞ்சாயத்து முடியட்டும். காத்திருங்கள் என கூறப்பட்டதாம். சசிகலா சிறைக்குப் போகும் போது தமக்கு அதிமுகவின் இளைஞர் பாசறை செயலர் பதவியை தர வேண்டும் என நெருக்கடி கொடுத்திருக்கிறார். சசிகலாவும் பார்க்கலாம் என சொல்லிவிட்டார்.

தினகரன் எதிர்ப்பு
ஆனால் ஏற்கனவே முதல்வர் பதவி வேறு ஒருவரிடம் போய்விட்டது; கட்சிக்குள்ளும் இன்னொரு அதிகார மையம் வந்துவிடக் கூடாது; ஆகையால் தீபக்கை சேர்க்கவே வேண்டாம் என தினகரன் தான் முதலில் அடம்பிடித்தாராம். பதவி கேட்டு தீபக் அடம்பிடிக்க பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் இதை சொல்லியிருக்கிறார் தினகரன்.

திடீர் பொங்கல்
தீபக் ரொம்பவே முரண்டு பிடிப்பதால் சசிகலாவும் கட்சி பதவி உட்பட எதுவும் தர வேண்டியதில்லை என கறாராக சொல்லிவிட்டாராம். இந்த தகவல் சொல்லப்பட எதுவும் கிடைக்கலையே என தீபக் கடும் அதிருப்தி அடைந்தாராம். இதை தெரிந்து கொண்ட ஓபிஎஸ் டீம்தான் டியூன் செய்து தற்போது தீபக்கை பேச வைத்திருக்கிறது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications