அடிமடியிலேயே கைவைக்கப் போய்.... சசிகலா கோஷ்டியை டெல்லி ஓட ஓட விரட்டுவதன் 'பகீர்' பின்னணி
சென்னை: சசிகலா கோஷ்டியை அதிமுகவில் இருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் என டெல்லி கங்கணம் கட்டுவதன் பகீர் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே அதிமுக, தமிழக அரசு விவகாரங்களை டெல்லி கையிலெடுத்துக் கொண்டது. இதற்கு செக் வைக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரை துணைக்கு அழைத்தார் சசிகலா கணவர் நடராஜன்.
ஜெயலலிதாவைப் பார்க்க ராகுல் காந்தியும் வந்தார். அதிமுகவுக்கு ஆதரவு குரலையும் ராகுல் காந்தி வெளிப்படுத்தியிருந்தார். இதை டெல்லி விரும்பாமல் சாட்டையை சுழற்றியது.
சிறையில் சசி
இதன்பின்னரும் சசிகலா கோஷ்டி அடங்காமல் ஆட்டம் போட்டது. விதி வலியது என்பது போல சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை இப்போது அனுபவிக்கிறார் சசிகலா. இருந்தபோதும் சசிகலா, தினகரன் இல்லாத அதிமுகதான் என்பதில் டெல்லி இவ்வளவு பிடிவாதம் பிடிப்பதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
காங்கிரஸ்
டெல்லியுடன் இணக்கமாக இருப்பதாக போக்கு காட்டிக் கொண்டே படுபயங்கரமான லாபிகளில் களமிறங்கியிருக்கிறார் சசிகலா கணவர் நடராஜன். காங்கிரஸ் கட்சியின் மூலமாக டெல்லியின் நடவடிக்கைகளுக்கு செக் வைக்க முழு முயற்சியில் நடராஜன் ஈடுபட்டார். இருந்தபோதும் திமுகவுக்காக காங்கிரஸ், சசிகலா கோஷ்டியை காப்பாற்ற கை கொடுக்கவில்லை.
சு.சுவாமி
ஆனாலும் மனதளராத நடராஜன் காங்கிரஸ் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பேசி வந்துள்ளார். அதேநேரத்தில் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி மூலமாகவும் சில நகர்வுகளை நடராஜன் முன்னெடுத்திருக்கிறார்.
மத்திய அமைச்சர்கள்
இவைமட்டுமின்றி டெல்லி மேலிடத்துக்கு ஆகாத மத்திய அமைச்சர்களையும் தங்களுக்கு ஆதரவாக வழிக்கு கொண்டு வரும் உச்சகட்ட வேலைகளையும் நடராஜன் தரப்பு லாபி செய்து வந்துள்ளது. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் நமக்கு செக் வைக்க சதி செய்கிறதே இந்த கோஷ்டி என்கிற கடுப்பில்தான் 'வேட்டை' 'வேட்டை' என வெடித்து கிளம்பியதாம் டெல்லி.
அடிமடியிலேயே கைவைத்தால் சும்மா இருப்பாங்களா?