நீட் தேர்வை சிபிஎஸ்இ நடத்த அனுமதித்தது ஏன்? மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி
சென்னை: நீட் தேர்வை நடத்த பொதுவான ஒரு அமைப்பை தேர்வு நடத்த அனுமதிக்காமல் சிபிஎஸ்இ அமைப்பை வைத்து தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று தரவரிசை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது.
இந்நிலையில் நாமக்கல்லை சேர்ந்த மாணவி, கிருத்திகா என்பவர், மாநில பாடத் திட்டத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்றார். ஆனால் நீட் தேர்வில் அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.
எனவே தற்போது நடைபெறும் கலந்தாய்வில் தன்னை இணைத்துக் கொள்ள உத்தரவிடக் கோரி ஹைகோர்டடில் வழக்கு தொடர்ந்தார். இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சிபிஎஸ்இ மற்றும் மாநில அரசு பாடத் திட்டங்கள் என இரு வகை பாடத் திட்டங்கள் உள்ளன. ஆனால் நீட் தேர்வை நடத்த பொதுவான ஒரு அமைப்பை தேர்வு நடத்த அனுமதிக்காமல் சிபிஎஸ்இ அமைப்பை வைத்து தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதித்தது ஏன்?
சிபிஎஸ்இ அமைப்பு தேர்வை நடத்தினால் அந்த அமைப்பின் பாடத் திட்டத்தில் உள்ள கேள்விகளைத்தானே கேட்கும். இப்போதும் அதுதான் நடந்துள்ளது. இதனால் மாநில பாடத் திட்டத்தில் பயின்றவர்கள் நீட் தேர்வை எழுதுவதில் சிரமத்தை அனுபவித்துள்ளதாக கூறுகிறார்கள். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கூறினார். இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.