ஐடி ரெய்டில் சிக்கிய செந்தில் பாலாஜி! அன்புநாதன் விவகாரத்தில் பழிவாங்கும் மாஜி- பரபர பின்னணி!
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி ரெய்டு வளையத்தில் சிக்கியது பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வருமான வரித்துறை வளையத்தில் சிக்கியது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், நிறுவனங்களைக் குடைந்து கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. எடப்பாடிக்கு எதிராக செந்தில்பாலாஜி கிளம்பியபோதே, அவர் மீது வருமான வரித்துறை ரெய்டு பாய்ந்திருக்க வேண்டியது. மிகத் தாமதமாக மத்திய அரசு களமிறங்கியதில் பல்வேறு பின்னணிகள் இருக்கின்றன' என்கின்றனர் கரூர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
சட்டசபை தேர்தல் நேரத்தில் வெளியான பண விவகாரங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் விவாதமாக மாறிப் போனது. திருப்பூர் கண்டெய்னர், கரூர் அன்புநாதன் என அன்றைய நாட்களில் பரபரப்பு செய்திகளாக மாறின.

அன்புநாதன் குடோன்
இதில், கரூர் அன்புநாதனின் குடோன்களில் நடந்த ரெய்டும் அங்கு பணம் அடுக்கப்பட்டிருந்த பாதாள அறைகளும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்த போலீஸ் அதிகாரி வந்திதா பாண்டேவும் இடமாற்றம் செய்யப்பட்டார்.

மாஜி அமைச்சர் மகன்
இந்த ரெய்டு குறித்து நம்மிடம் பேசிய கரூர் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், மேற்கு மண்டலத்தின் பெரும்பாலான தொகுதிகளுக்கு அன்புநாதன் குடோனில் இருந்து பரிவர்த்தனைகள் நடந்தன. இந்தக் குடோனுக்கு ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சரின் மகன் அடிக்கடி வந்து போன சி.சி.டி.வி காட்சிகள் கைப்பற்றப்பட்டன.

போட்டுக் கொடுத்த செந்தில் பாலாஜி
இந்தக் காட்சிகள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த ஆட்சியில் கோலோச்சிய ஐவரணியின் முக்கிய நபராக இருந்த அந்த மாண்புமிகுவின் பரிவர்த்தனைகளை தேர்தல் பறக்கும் படைகளுக்குக் கறுப்பு ஆடு ஒன்று போட்டுக் கொடுத்துவிட்டது. அந்தக் கறுப்பு ஆடு வேறு யாருமல்ல, செந்தில் பாலாஜிதான்.

இதனால்தான்...
கரூர் தொகுதியில் இருந்து அரவக்குறிச்சி தொகுதிக்கு இடம் மாறிய கடுப்பில்தான் குடோன் விவகாரத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டார் என்ற பேச்சும் எழுந்தது. தி.மு.க கே.சி.பழனிசாமியோடு நட்புறவில் இருந்ததால், அவரை எதிர்த்துப் போட்டியிட செந்தில் பாலாஜி விரும்பவில்லை.

சசிகலாவுக்கு எதிரணியில்..
ஜெயலலிதா மரணத்துக்குப்பின் அ.தி.மு.கவின் முக்கிய தலைகளை அடக்கி வைப்பதற்கும் குடோன் விவகாரம் பயன்படுத்தப்பட்டது. அதற்கேற்ப, ஜெயலலிதா இறந்து ஓரிரு வாரங்களில் அ.தி.மு.கவின் ஒரு பிரிவு சசிகலாவுக்கு எதிராகக் கிளம்பியது. இதில் அந்த முன்னாள் மாண்புமிகுவும் இணைந்து கொண்டார்.

கைது செய்யும் வரை ஓய்வில்லை
அன்புநாதன் விவகாரமும் அடங்கிப் போனது. ஆனால், குடோனில் இருந்து பெரும் பணம் பறிமுதல் செய்யப்படுவதற்கு காரணம், அந்தக் கறுப்பு ஆடுதான் என்கிற ஆத்திரத்தில் இருந்த அந்த முன்னாள் மாண்புமிகுவின் நெருக்குதல்தான் செந்தில் பாலாஜியை விரட்டிக் கொண்டிருக்கிறது. அவரைக் கைது செய்யும் வரையில் இந்த டீம் ஓயப் போவதில்லை" என்றார் விரிவாக.

வேடிக்கை பார்த்த டெல்லி
"ஓபிஎஸ்ஸும் எடப்பாடியும் இணைந்த பிறகு, பொதுக்குழு கூட்டமும் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது. ஆனால், ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் அப்போது எடுக்கப்படவில்லை. செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டவர்களை வழிக்குக் கொண்டு வர, சமுதாயரீதியிலான அழுத்தமும் தரப்பட்டது. இதில், தோப்பு வெங்டாச்சலம் மட்டும் நழுவிக் கொள்ள, செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்டோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மாநில அரசுக்கு நெருக்கடி வருவதால், வருமான வரித்துறையை மத்திய அரசு பயன்படுத்தும் என எதிர்பார்த்தனர் சிலர். ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தது.

திடீரென இறங்கியது ஏன்
'அந்தக் குடும்பத்துக்கு எதிராக அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டது. இவர்களில் சிலரைக்கூட அதிகாரத்தில் உள்ளவர்களால் வழிக்குக் கொண்டு வர முடியவில்லை. ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது அவர்கள் பொறுப்பு. சட்டரீதியிலான வழிமுறைகளைப் பார்க்கட்டும்' என உறுதியாகக் கூறிவிட்டனர். தகுதி நீக்க நடவடிக்கை பாய்ந்த பிறகே வருமான வரித்துறை களமிறங்கியுள்ளது. தினகரன் அணியின் முக்கிய மாஸ்டர் மைண்டாக இருந்த பழனியப்பன் போலீஸ் வளையத்தில் இருக்கிறார். அவரை அடுத்து செந்தில் பாலாஜி குறிவைக்கப்பட்டிருக்கிறார்.

நேரடி வார்னிங்
இவர்களை ஓரம்கட்டிவிட்டால் தினகரன் அணி வலுவிழந்துவிடும். எடப்பாடிக்கு எதிராக வரிந்து கட்டுகிறவர்களுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை இது" என்கிறார் பா.ஜ.க ஆதரவு பிரமுகர் ஒருவர்.
அரசியலுக்குள் நுழைந்த குறுகிய காலத்திலேயே அமைச்சர், மாவட்ட செயலாளர் என உயரிய பதவிகளைப் பிடித்தவர் செந்தில் பாலாஜி. அதிகாரத்தை வைத்துக் கொண்டு கரூரையே கதிகலங்க வைத்தவர், தற்போது அரசின் அதிகாரத்தை எதிர்கொள்ள முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications