பாமக வக்கீல் பாலுவின் ஸ்டாலின், ஓபிஎஸ், கமலுடனான திடீர் சந்திப்பு... பரபர பின்னணி
மு.க. ஸ்டாலின், ஓபிஎஸ், கமல்ஹாசன் ஆகியோரை பாமக வழக்கறிஞர் பாலு திடீரென சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் களேபரங்களுக்கு மத்தியில் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது பாமக வழக்கறிஞர் பாலுவின் அரசியல் திடீர் சந்திப்புகள். மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் கமல்ஹாசனை பாலு சந்தித்தது ஏன் என்பதுதான் அரசியலின் ஹாட் அலசல்களில் ஒன்று.
நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு காரணமானவர்களில் பாமகவின் வழக்கறிஞர் பாலுவும் ஒருவர்.
தற்போது நாடு முழுவதும் மாநில, தேசிய நெடுஞ்சாலை மதுபான கடைகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் பெரும்பாலான நகரங்களில் மதுபான கடைகளை குடிகாரர்கள் தேடி அலையும் நிலைதான் இருக்கிறது.

ஸ்டாலின், ஓபிஎஸ்ஸுடன் சந்திப்பு
இந்த நிலையில் திடீரென இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை பாமக வழக்கறிஞர் பாலு சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையும் பாலு சந்தித்தார்.

புதிய அணியா?
இந்த சந்திப்புகளின் பின்னணியில் அரசியல் இருக்குமோ? அல்லது உள்ளாட்சித் தேர்தலுக்கான வியூகமோ? என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில் தொடர்ந்து அதிமுக, திமுகவை பாமக கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இச்சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. ஆகையால் புதிய அரசியல் அணி உருவாகிறதா? என்ற கேள்வி எழுந்தது.

கமல்ஹாசனுடன் சந்திப்பு
இச்சந்திப்புகளைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனையும் வழக்கறிஞர் பாலு சந்தித்து பேசினார். இது தொடர்பாக பாமக வட்டாரங்களில் நாம் விசாரித்தோம்.

மாவட்ட சாலைகள் விவகாரம்
இச்சந்திப்புகளில் எந்த ஒரு அரசியலுமே இல்லை. மதுபான கடைகளை மூடிவிட்ட மாநில அரசுகள், நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் அப்படி அறிவிப்பை எடப்பாடி அரசு செய்ய முயற்சித்தால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று தடுக்க வேண்டும் என பாமக தரப்பில் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாம்.












Click it and Unblock the Notifications