காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கினால் புதுவை ஆளுநராக இருந்த கட்டாரியா டிஸ்மிஸ்?
புதுச்சேரி: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 'தன்னிச்சையாக' முடிவெடுத்ததாலேயே புதுச்சேரி ஆளுநர் கட்டாரியா மாற்றப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்தது முதலே பல மாநில ஆளுநர்கள் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. மத்திய உள்துறை செயலரும் சில மாநில ஆளுநர்களை தொலைபேசியில் அழைத்து ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து மாநில ஆளுநர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அதே நேரத்தில் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் சிக்கிய மேற்கு வங்க ஆளுநர் எம்.கே. நாராயணன், கோவா ஆளுநர் வான்சூ ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.

குஜராத்- மிசோரம் ஆளுநர்கள் மாற்றம்
பின்னர் குஜராத் மாநில ஆளுநர் கமலா பெனிவால் மிசோரம் மாநிலத்துக்கு தூக்கியடிக்கப்பட்டார். அம்மாநில ஆளுநராக இருந்த வைக்கம் புருஷோத்தமன், நாகாலாந்து மாநிலத்துக்கு மாற்றப்பட்டார்.

வைக்கம் புருஷோத்தமன் ராஜினாமா
ஆனால் தம்மை கலந்து ஆலோசிக்காமல் இடம் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் வைக்கம் புருஷோத்தமன். அத்துடன் தமக்கு இடம் மாறுதல் செய்து மத்திய அரசு அனுப்பிய உத்தரவையும் நேற்று திருப்பி அனுப்பினார்.

கட்டாரியா திடீர் டிஸ்மிஸ்
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் அரசின் 'ஹிட்' லிஸ்டில் அதாவது நீக்கப்பட வேண்டிய ஆளுநர்கள் என்ற பட்டியலிலேயே இடம்பெறாத புதுச்சேரி ஆளுநர் கட்டாரியா திடீரென்று நேற்று இரவு அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்டதற்கு முதல்வர் ரங்கசாமியின் நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது.

சங்கராச்சாரியார் வழக்கில் அப்பீல் முடிவு
ஆனால் காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று ஆளுநராக இருந்த கட்டாரியா மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

தன்னிச்சையாக முடிவெடுத்தது காரணம்?
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் தமக்குரிய அதிகாரங்களின் அடிப்படையில் அப்படி கட்டாரியா தன்னிச்சையாக முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. புதுச்சேரி ஆளுநர் இப்படி "முக்கியமான" வழக்குகளில் தன்னிச்சையாக முடிவெடுத்ததாலேயே மத்திய அரசு அவரை இரவோடு இரவாக டிஸ்மிஸ் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications