காய்ச்சல் என சொல்லிதானே கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வரவில்லை ராகுல் காந்தி? ஆனால்..!
Recommended Video
சென்னை: சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று மாலை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு, திமுக ஏற்பாடு செய்திருந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
அவர் உரையாற்றுகையில், ராகுல் காந்தி கேரளாவுக்கு சென்று வந்த பிறகு, கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும், எனவே அவரால் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறினார்.
டெல்லியில் பிஸி
குலாம் நபி ஆசாத் தெரிவித்தது உண்மைதானா என்று டெல்லி வட்டார தகவல்கள் விசாரித்தோம். ஆனால் கிடைத்ததோ அதிர்ச்சி தகவல். ஆம் கடுமையான காய்ச்சல் என்று கூறி ராகுல்காந்தி, டெல்லியில் ஓய்வு எடுக்க வில்லை. அவர் தனது பணிகளை வழக்கம்போல மேற்கொண்டு தான் இருந்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் ஆவதையொட்டி டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.
பல விஷயங்கள்
இருவரும் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக, முயற்சிகள் எடுத்து வருவது குறித்து தனது அதிருப்தியை ராகுல்காந்தியிடம் குமாரசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. கர்நாடக கூட்டணி அரசின் சிக்கல்கள், வருங்காலத் திட்டங்கள் என்ன என்பது பற்றி எல்லாம் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். அமைச்சரவை விரிவாக்கம் பற்றியும் ஆலோசனை நடத்தியுள்ளனர். ராகுல் காந்தி-குமாரசாமி சந்திப்பு தொடர்பான, புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் ராகுல் காந்தி, மிகவும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவதை பார்க்க முடிகிறது.
ஏன் வரவில்லை
இருப்பினும் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எதற்காக ராகுல் காந்தி வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். அவர்கள் கூறிய தகவல் இதுதான்: கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா, பங்கேற்ற திமுக அழைப்பு விடுத்தது, ராகுல்காந்திக்கு பிடிக்கவில்லை. திமுக சார்பில் இதற்கு முன்பு நடைபெற்ற விழாக்களின்போது பாரதிய ஜனதா கட்சியை திமுக தவிர்த்தது. ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக நெருக்கம் காட்டுவதை போன்ற தோற்றம் ராகுலுக்கு பிடிக்கவில்லை.
ஒரே மேடை
அடுத்ததாக, அமித்ஷாவுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொள்வதற்கு ராகுல் காந்திக்கு விருப்பமில்லை. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சித் தலைவருடன், ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி அமர்ந்திருப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்று காங்கிரஸ் கட்சி ஆலோசகர்கள் ராகுல் காந்திக்கு தெரிவித்துள்ளனர். மேலும் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் செயல்பாடுகள், கூட்டு வன்முறைகள் சமீபமாக அதிகரித்துள்ளன. அதுகுறித்து அமித்ஷா இருக்கும் மேடையில் ராகுல் காந்தியால் பேசாமல் இருக்க முடியாது. அவ்வாறு பேசினால் நினைவேந்தல் நிகழ்ச்சி அரசியல் மேடை ஆக மாறிவிடும் என்ற தயக்கமும் ராகுல் காந்திக்கு இருந்தது. எனவே நேற்றைய தினம், குமாரசாமியை சந்திப்பது உள்ளிட்ட வேறு பல அலுவல்களுக்கு அவர் நேரம் ஒதுக்கியிருந்தார். இந்த நிலையில்தான் அமித்ஷா வருகை திடீரென ரத்தானது. இருப்பினும் தனது திட்டத்தை மாற்றிக்கொள்ள ராகுல் காந்தி விரும்பவில்லை. இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.