நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடிட்டு கள்ளுக் கடையைத் திறப்போம்.. கமுதியில் சீமான் அதிரடி
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக் கடைகளை திறக்கும் என்று சீமான் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்: நாம் தமிழர் அரசு ஏன் அமைய வேண்டும் என்ற தலைப்பில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சீமான் பேசினார். அப்போது டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளை திறப்போம் என்று கூறினார்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு நேற்று சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கமுதியில் சிறுவர் பூங்கா அருகில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று சீமான் பேசியதாவது:

கல்வி இலவசம்
கல்வி முறை முறையை மாற்ற வேண்டும். கல்வி என்பது சந்தைப் பொருளல்ல. அனைத்து மக்களுக்கும் தரமான, சமமான கல்வி இலவசமாக வழங்கப்படும். விளையாட்டுதான் கல்வி என்று குழந்தை விரும்பினால் அதற்கு விளையாட்டைத்தான் கல்வியாக நாம் தமிழர் அரசு அமைந்தால் கொடுக்கும். முதல்வர் குழந்தை முதல் அனைவரின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படிக்க வேண்டும்.

பண்ணை நிலம்
விவசாயிகளிடம் இருந்து நிலத்தை நாம் தமிழர் அரசுக் குத்தகைக்கு எடுத்து மண் ஆய்வு செய்து பண்ணை அமைப்போம். எந்த நிலத்தில் என்ன விளையும் என்று அறிந்த பின்னர் அதனை மட்டுமே அங்கு விளையச் செய்வோம். அதனைச் சுற்றி அதற்கான தொழிற்சாலைகளை அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்குவோம்.

சிற்றூர் வளர்ச்சி
ஒரு நாட்டில் சிற்றூர்களின் வளர்ச்சியை உயர்த்தாமல் நாடு உயராது. அதனால் கிராமங்கள், நகரங்கள் என அனைத்தும் சம நிலையில் வளர்ச்சி காணும் வகையில் திட்டங்கள் தீட்டப்படும். ஆறு, குளங்களைக் காப்போம்.

மொழியைக் காக்க..
அழிந்து கொண்டிருக்கும் மொழியைக் கட்டி எழுப்ப நாம் தமிழர் ஆட்சி தேவைப்படுகிறது. தமிழ்ச்செல்வன் என்று பெயர் வைத்திருந்தால் உடனடியாக அவருக்கு வேலைக் கொடுக்கப்பட வேண்டும். காமராஜரோடு போட்டி போட்டு ஆக சிறந்த நிர்வாகத்தை நாங்கள் கொடுப்போம்.

மாட்டிறைச்சிக்குத் தடை
ஜல்லிக்கட்டுக்குத் தடையை கொண்டு வந்த மத்திய அரசு மாட்டிறைச்சிக்குத் தடையை விதித்துள்ளது. இது கறிக்கான தடை இல்லை. மாட்டுக்கான தடை. கறிக்காக மாட்டை வாங்கவோ விற்கவோ முடியாது என்றால் மாட்டை யார் வளர்ப்பார்? எனவே, இயற்கை வேளாண்மையை அதிகரித்து அதில் கால்நடைகளை வளர்த்து வேலைவாய்ப்பை உருவாக்குவோம்.

வாட்டர் கேன்
எஸ்டியால் 20 ரூபாய்க்கு விற்ற வாட்டர் கேன் இன்று 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது 400 ரூபாயாக மாறுவதற்குள் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.

டாஸ்மாக்
நாடெங்கும் பனை மரம் வளர்க்கப்படும். அது தொடர்பான அனைத்துப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும். பதநீர், கள் விற்கப்படும். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு கள்ளு கடை திறக்கப்படும் என்று சீமான் பேசினார்.












Click it and Unblock the Notifications