இது நாடா இல்லை காடா.... ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்
சென்னை: இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது என்றால் நடப்பது ஜனநாயகமான ஆட்சியா. மக்களுக்காக நடக்கிற ஆட்சியா. இது நாடா அல்லது காடா என்று கேட்க விரும்புகிறேன் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சாடியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தமிழகத்திற்கு உரிய நீரை தர மறுக்கும் கர்நாடகத்தை கண்டித்தும் சென்னையில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடந்த இந்த போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், "இது விவசாயிகள் நலன் காக்கும் ஒரு போராட்டம். இந்த போராட்ட களத்தை நான் அரசியல் ரீதியாக திருப்ப நினைக்கவில்லை. நாடாள வருபவர்கள் விவசாயிகளின் நலனை கவனிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு விவசாயிகளின் நிலங்களை பிடுங்கி பணக்காரர்களுக்கு கொடுக்க முடியும் என்பதில் ஆர்வம் காட்டக் கூடாது.
தமிழக விவசாயிகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீர், கர்நாடகாவில் இருந்து வரவில்லை. இதற்காக விவசாயிகள் போராடுகிறார்கள். இதனை தீர்ப்பதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுபவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். அதைவிட்டு இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் அனைத்து விவசாய சங்சங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மீது சட்ட விரோதமான குற்றங்களை செய்தார் என்று வழக்கு போட்டு அவரை ஒரு கிரிமினலாக காட்டுகிறார்கள். இது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.
நான் மிகவும் வருத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி. சமீபத்தில் ராகுல்காந்தி திருச்சி வந்தபோது, விவசாயி பெருங்குடி மக்களை அவர் சந்திக்க வேண்டும் என்று சொன்னவுடன், நான் அதற்கு ஏற்பாடு செய்தேன். பாண்டியன் உள்பட அத்தனை பேரையும் எடுத்துக்கொடுத்தேன். ஆனால் தமிழக காவல்துறையினர் பாண்டியனை ராகுல் காந்தியை பார்க்க விடாமல் தடுத்துவிட்டார்கள்.
காரணம் அவர் சட்ட விரோதமான காரியங்களை செய்தார். விவசாயிகளுடைய நலனுக்காக பாடுபடுவது சட்ட விரோதமான காரியமா. இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது என்றால் நடப்பது ஜனநாயகமான ஆட்சியா. மக்களுக்காக நடக்கிற ஆட்சியா. இது நாடா அல்லது காடா என்று கேட்க விரும்புகிறேன்.
அரசியல் பேசக்கூடாது. பேசமாட்டேன். ஆனால் மக்கள் பாதிக்கப்படும்போது அதனை சரிசெய்யக்கூடியவர்கள், செய்யவில்லை என்றால் அதனை தட்டிக்கேட்க வேண்டிய உரிமை ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உண்டு. அதனால்தான் நான் இதனை கேட்கிறேன். நமக்கு வரவேண்டிய நீர் வந்தாக வேண்டும்.
காவிரி நீர் பிரச்சனை தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் 11ம் நூற்றாண்டில் இருந்தே இருக்கிறது என்று சொல்லுவார்கள். ஏன் இந்தப் பிரச்சனையை தற்போது ஆளுகிறவர்கள் தீர்த்து வைத்தால் தலை வெடித்தா போய்விடும். செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தானே ஆட்சியில் அமர வைத்தார்கள். ஆனால் அமர வைத்த பின்னர் ஒன்றும் செய்யமாட்டேன் என மலையேறி போய்விட்டால் என்ன என்று கேட்க விரும்புகின்றேன்.
கர்நாடகாவில் ஆளுவது காங்கிரஸ் கட்சிதானே, நீங்கள் ஏன் அங்கு சொல்லக் கூடாது என சிலர் கேட்கலாம். என்ன செய்வது தமிழர்களின் வயிறு வேறு. அங்கே இருப்பவர்களின் வயிறு வேறு. ஆக இதற்காக போராடும்போது கர்நாடக முதல் அமைச்சர் விவசாயிகளோடு பச்சை துண்டை அணிந்து டெல்லியில் போராட்டம் நடத்துகின்றார். ஆனால் இங்கு இருப்பவர்கள் கடிதம் எழுதுவதோடு சரி என்று இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications