விசிகவின் அனைத்துக்கட்சி கூட்டம்... ஸ்டாலினை விட்டு விட்டு கனிமொழியை திருமா அழைத்தது ஏன்?
பொது சிவில் சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுகவில் கனிமொழியை முக்கியத்துவம் கொடுத்து அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: பா.ஜ.க. அரசின் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக 14 ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் கருத்தரங்க கூட்டத்தை நடத்துகிறார் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன். இதில், ஒத்த கருத்துடைய அதேசமயம் அரசியல் ரீதியாக எதிரும் புதிருமாக இருக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களை ஒரே மேடையில் அமர்த்தும் முயற்சியை எடுத்துவருகிறார் திருமாவளவன்.
திமுக தரப்பில் கனிமொழி, வைகோ, திருநாவுக்கரசு, ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் சாதகமான பதிலை சொல்லியிருக்கிறார்கள். அதிமுக தரப்பிலிருந்து ஒருவரை கலந்துகொள்ளவைக்கும் முயற்சியும் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
தற்போதைய சூழலில், மத்திய அரசை பகைத்துக்கொள்ள வேண்டாம் என நினைக்கும் சசிகலா தரப்பு, பொது சிவில் சட்டம் குறித்தெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை என்கிறது. இதற்கிடையே, மு.க.ஸ்டாலினை கூப்பிடாமல் கனிமொழியை திருமா கூப்பிட்டிருப்பது ஏன் ? என திமுகவில் விவாதம் எதிரொலிக்கிறதாம்.