மதுரைக்கார விஜயகாந்த் தனித்து களமிறங்க தயாரானது ஏன்? பரபர பின்னணி தகவல்கள்!!
சென்னை: நான் தெளிவா சொல்றேன் கேட்டுக்கங்க... தேர்தல்ல தனியா நிக்கப் போறேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன். நான் யார் கிட்டையும் பேரம் பேசலை. கூட்டணிக்கு கூப்பிட்ட எல்லோருக்கும் நன்றி என்று கூறி மூன்று மாத சஸ்பென்ஸ்க்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்னவே மார்ச் 4ம் தேதிதான் என்றாலும், 2015ம் ஆண்டு மத்தியிலேயே சட்டசபை தேர்தலுக்கான ஜூரம் ஆரம்பித்து விட்டது.
திமுக, அதிமுக உடன் கூட்டணியில்லை என்று அறிவித்த பாட்டாளி மக்கள் கட்சியோ, அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மண்டல மாநாடுகளை நடத்தி மக்களை சந்தித்தது.
மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தை தொடங்கி பின்னர் கூட்டணியாக மாற்றி மக்களை சந்தித்தனர். திமுக, அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆளும் கட்சியை வீழ்த்த திமுக தன் பங்குக்கு வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினோ 234 தொகுதிகளிலும் 'நமக்கு நாமே பயணம் செய்து, முடியட்டும்...விடியட்டும்...' என்று கூறி குறை கேட்டார்.
விஜயகாந்த் மக்களுக்காக மக்கள் பயணம் செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆனால் ஆளும் கட்சியோ நடக்கும் விசயங்களை அமைதியாக வேடிக்கை பார்த்தது. எல்லாம் டிசம்பர் மாத மழை வரைக்கும்தான். இரண்டு நாட்களில் சென்னை, காஞ்சி, திருவள்ளூரை புரட்டி போட்ட மழை ஆளும்கட்சியை அசைத்து பார்த்தது. எனவேதான் சூழ்நிலைக்கு தக்க முடிவெடுப்போம் என்றார் ஜெயலலிதா.
எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்பது போல விஜயகாந்த் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தன. கூட்டணிக்கு வருமாறு பாஜகவும், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் நேரடியாகவே சென்று அழைப்பு விடுத்தனர்.
திமுக தலைவர் கருணாநிதியும் சாடை மாடையாக அழைப்பு விடுத்தார். பின்னர் நேரடியாகவும் அழைப்பு விடுத்ததோடு, தனது சகாக்களை கூட்டணி பேச மறைமுகமாக தூது அனுப்பினார் கருணாநிதி.
பாஜக தலைவர்கள் ஒருபக்கம் பேச, திமுகவின் முக்கிய தலைவர்கள் ஒருபக்கம் பேச, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்க, யார் கூடவும் வரமாட்டேன். நான் தனியா நிற்கிறேன், திமுக, அதிமுக, பாமக தவிர மற்றவர்கள் என் தலைமையை ஏற்று வரலாம் என்று கூறி அழைப்பு விடுத்துள்ளார் விஜயகாந்த்.
கடந்த சில மாதங்களாக விஜயகாந்த் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் திடீரென இப்படி அறிவிக்க காரணம் என்ன என்பது பற்றி விவரிக்கின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.

தலைமைக்கு கட்டுப்படுவோம்
நேர்காணலில் விருப்பமனு கொடுத்தவர்களுடன் கேட்டு முடிவெடுப்பேன் என்று காஞ்சியில் சொன்னார் விஜயகாந்த். அதேபோல சீட் கேட்டவர்களிடம் விஜயகாந்த் கேட்கவே, அவர்களில் சிலரோ திமுக உடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறியுள்ளனர். பலரோ தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தெரிவித்தனராம்.

திமுகவிடம் டிமாண்ட்
முதலில் தி.மு.க கூட்டணியில் 104 இடங்கள், துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் இடம், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவிகித இடங்கள் என்று கோரிக்கை வைத்தார் விஜயகாந்த். ஆனால் திமுக தரப்போ 41 ல் தொடங்கி இறுதியில் 55வரை நின்றது. 59 இடங்களுக்கு முடிவாகிவிட்டதாக திமுக தரப்பில் இருப்பில் செய்தி பரப்பப்பட்டது.

துணை முதல்வர் பதவி
அமைச்சரவையில் இடம், துணைமுதல்வர் பதவி, உள்ளாட்சி அமைப்புகளில் 20 சதவிகிதம் என்று விஜயகாந்த் போட்ட நிபந்தனைகளை திமுக ஏற்கவில்லை. இப்படி ஏற்க முடியாத நிபந்தனைகளை போட்டு இக்கட்டில் தள்ளியது விஜயகாந்த் போட்ட மாஸ்டர் பிளான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

மார்ச் 6ல் பேச்சுவார்த்தை
திமுகவின் தூதரிடம் மார்ச் 6ம் தேதி ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய விஜயகாந்த், எடுத்த எடுப்பிலேயே காவல்துறை, கல்வித்துறை, விவசாயத்துறை உள்ளிட்ட 5 இலாக்காக்களை கேட்டாராம். உள்ளாட்சி, கூட்டுறவு சங்க தேர்தலில் குறிப்பிட்ட சதவிகித இடங்களும் கேட்டாராம். இதுக்கு ஓகே சொன்னா மேற்கொண்டு பேசலாம் என்று கூறினாராம்.

ஆட்சியில் பங்கு எப்படி?
தூது வந்த திமுக தரப்போ, ஆட்சியில் பங்கு என்பது நடக்காத காரியம் என்று கூறியதோடு, கூடுதல் இடங்கள் கேட்கலாம் என்று கூறவே விஜயகாந்த் கோபத்தில் பேச்சை முடித்துக்கொண்டாராம்.

பால், பழம் பேச்சு
இந்த சூழ்நிலையில்தான் அரசியல் சாணக்கியரான திமுக தலைவர் கருணாநிதி, பழம் கனிந்துவிட்டது பாலில் விழ வேண்டியதுதான் பாக்கி என்று கூறினார். இதற்கு விஜயகாந்த் தரப்பு எந்தவித ரியாக்சனும் காட்டவில்லை.

மறக்காத பிரேமலதா
திமுக உடன் கூட்டணி வைக்க முட்டுக்கட்டை போட்டது பிரேமலதாதான்.காரணம் கடந்த சட்டசபை தேர்தலில் வடிவேலுவை வைத்து ஓட்டு ஓட்டு என்று ஓட்டியது திமுகதான். விஜயகாந்தின் ஒவ்வொரு ரியாக்சனையும் சன்டிவியில் போட்டு கிண்டல் செய்தனர். இதை பிரேமலதா மறக்கவில்லை என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

பாஜகவிடம் பேச்சுவார்த்தை
பாஜக வசம் அதிகம் பேசியது பிரேமலதாவும், சுதீசும்தானாம். 150 சீட்டுகள், ராஜ்யசபா எம்.பி., பிரேமலதாவுக்கு பொறுப்பு என்று டிமாண்ட் வைக்கப்பட்டதாகவும், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிக்க வேண்டும் என்றும் பேசியுள்ளனர். ஆனால் பாஜக தரப்பு இதனை ஏற்கவில்லையாம்.

முதல்வர் வேட்பாளர்
மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளரை சந்தித்த விஜயகாந்தின் தூதர், முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும், அதற்கு சம்மதமெனில் கூட்டணிக்கு வரத்தயார் என்று கூறியுள்ளார். அதற்கு வைகோ, மற்ற தலைவர்களுடன் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்று கூறினாராம். கூட்டணிக்கு வரும் பட்சத்தில் 120 தொகுதிகள் வரை விஜயகாந்துக்கு ஒதுக்கலாம் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நினைத்து இருந்தார்களாம்.

தனித்து போட்டி
மூன்று பக்கம் கூட்டணி பற்றி பேசியும் எதுவுமே ஒத்துவராத நிலையிலேயே தனித்து போட்டி என்று அறிவித்துள்ளார் விஜயகாந்த். இந்த அறிவிப்பு யாருக்கு அதிர்ச்சியோ இல்லையோ நிச்சயம் திமுகவிற்கு அதிர்ச்சியாகவே இருக்கும். அடுத்தது என்ன? மதிமுகவில் செய்தது போல ஆபரேசனை ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறதாம் திமுக தரப்பு.

முதல்வர் கனவு
பாஜக உடன் கூட்டணி வைத்து அது தோல்வி ரிசல்டை தேமுதிகவிற்க கொடுத்து விட்டால், கட்சி காணாமல் போய்விடும். திமுகவை எந்த காலத்திலும் நம்ப முடியாது என்பது பிரேமலதாவின் கருத்து. எனவேதான் முதல்வர் கனவுடன் தனித்து போட்டி என்று தனது முடிவை அறிவித்துள்ளார் விஜயகாந்த் என்கிறது தேமுதிக தரப்பு.

என்னென்ன நடக்குமோ?
இன்னும் 65 நாட்களில் தமிழக அரசியல் வானில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறதோ? என்று வாக்காளர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் மதுரைக்காரருக்கு மஸ்து ஜாஸ்திதான் என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள். விஜயகாந்த் ஜெயிப்பாரா? எல்லாம் நடுநிலை வாக்காளர்களின் கையில்தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications