தேர்தல் கூட்டணி: விஜயகாந்த் இழுவோ இழு என இழுத்தடிப்பது இதுக்குத்தான்..
சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி அமைப்பதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனைத்து கட்சிகளுக்கும் 'தண்ணிகாட்டி' குழப்பத்தில் மூழ்க வைத்திருப்பது 'தேர்தல் செலவு' பேரத்தால் மட்டுமல்ல.. ஒரு சில தமிழக அரசியல் நிகழ்வுகளும் காரணம் என்கின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.
தமிழகத்தில் 2001ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது ஜி.கே. மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அதிமுகவுடன் கூட்டணி அமைத்த்தது. ஆனால் அந்த கூட்டணியும் சீக்கிரமாக உருவானது இல்லை. கிட்டத்தட்ட இப்போது விஜயகாந்த் கடை பிடிக்கும் பாணி, அப்போது மூப்பனார் கடைபிடித்தது என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.
சட்டசபை தேர்தலில் 'கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்போம் என்று கூறிவந்தார் மூப்பனார். ஆனால் மூப்பனாரும்- ஜெயலலிதாவும் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொள்ள முடியாது என்று ஜெயலலிதா பதிலடி கொடுத்தார்.

த.மா.கா.- அதிமுக கூட்டணி
இதனால் த.மா.கா.- அதிமுக கூட்டணியில் விரிசல் விழுந்தது. உடனே திமுக தலைவர் கருணாநிதி, த.மா.கா.வுடன் கூட்டணி சேர அழைப்பு விடுத்தார். த.மா.காவுக்கு 40 தொகுதிகள் தரத் தயார் என்றும் கூட கருணாநிதி கூறிப் பார்த்தார். ஆனால் இப்போதைய விஜயகாந்த் போல அப்போது மூப்பனார் மவுனம் காத்தார்.

மூப்பனாரின் மவுனம்
உடனே அதிமுகவோ 45 தொகுதிகள் வரை தருகிறோம் என்று த.ம.கா.வுக்கு அழைப்பு விடுத்ததுடன் புதுச்சேரியில் ஆட்சியில் பங்கு தருகிறோம் என்றும் அதிரடி காட்டியது. அப்போதும் மூப்பனார் அசரவில்லை. ஒரு மாத கால இழுத்தடிப்புக்குப் பின்னர் த.மா.கா- காங்கிரஸ் கட்சிகள் அதிமுக அணியில் இணைந்தன.

மூப்பனார் பாணி
அன்று மூப்பனார் மவுனமாக இருக்க இருக்க தொகுதிகளின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போனதுடன் ஆட்சியில் பங்கும் கிடைக்கும் என்ற உறுதிமொழியும் கிடைத்தது. தற்போது அதே பாணியில்தான் விஜயகாந்தும் மவுனமாக இருக்க இருக்க பாஜக, திமுக, காங்கிரஸ் கட்சிகளும் வலைவீசிக் கொண்டே இருக்கின்றன என்கின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.

பாமக கதி
அதேபோல் 2009 லோக்சபா தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏற்பட்ட கதி தங்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் நினைக்கிறதாம் தேமுதிக. 2009-ல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி, 7 தொகுதிகளைப் பெற்றது. ஆனால் ஒன்றில் கூட வெல்ல முடியவில்லை.

முடங்குமோ முரசு?
தங்களது கூட்டணியில் இருந்து விலகி அதிமுக அணியில் சேர்ந்ததாலேயே பா.ம.க.வை குறி வைத்து திமுக தரப்பு தோல்வி அடையச் செய்ததாக அப்போது ராமதாஸ் குற்றம்சாட்டினார். இப்போது பரம வைரியாக இருப்பதால் அதிமுகவும் தங்களது கட்சி வேட்பாளர்களை எப்பாடுபட்டேனும் தோற்கடித்து முரசு சின்னத்தையே முடக்கிவிடலாம் என்று கருதுகிறாராம் விஜயகாந்த்.

அச்சத்துடன் வியூகம்
அதனால் அவசரப்படாமல் கூட்டணி வியூகத்தை இறுதி நேரத்தில் அறிவிக்கலாம் என சற்று அச்சத்துடன் விஜயகாந்த் இருப்பதாகவும் தேமுதிக வட்டாரங்கள் கருதுகின்றன.
"கேப்டனுக்கு" ஆசையும் இருக்கு.. அச்சமும் இருக்கு..!












Click it and Unblock the Notifications