"என் கணவரும் கள்ளச்சாராயம் குடிச்சுத்தான் இறந்தார்".. மனைவி புகார்.. புதைத்த உடலை தோண்ட முடிவு!
கள்ளக்குறிச்ச்சி: கள்ளக்குறிச்ச்சி அருகே மாதவச்சேரியை சேர்ந்த ஜெயமுருகன் 4 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது கணவர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
செய்ய சுகாதாரத் துறையினர், போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 54 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. திமுக அமைச்சர்கள், அதிமுக, தேமுதிக, பாஜக தலைவர்கள் என பலரும் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து உள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். அர்கேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ 50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எவ வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று, பலியானோரின் குடும்பத்தினரிடமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் குடும்பத்தினரிடமும் வழங்கினர். தொடர்ந்து, உயிரிழந்தவர்களுக்கும் ரூ. 10 லட்சம் வழங்கப்பட உள்ளது.
என் கணவரும் கள்ளச்சாராயத்தால் தான் இறந்தார்: இந்த நிலையில்தான் தனது கணவரும் கள்ளச்சாராயம் குடித்து தான் இறந்தார் என்று அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். கச்சிராயபாளையம் அருகே மாதவச்சேரியை சேர்ந்த ஜெயமுருகன் 4 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக அவரது மனைவி விஜயலட்சுமி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
37 வயதான ஜெயமுருகன், 4 நாட்களுக்கு முன்பாக கடுமையான வயிற்று வலி, தலை வலி ஏற்பட்டு வீட்டிலேயே இறந்துவிட்டார். 19ஆம் தேதி ஜெயமுருகன் உடலை அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்நிலையில் ஜெயமுருகனின் மனைவி போலீசில், தனது கணவரும் கள்ளச்சாராயம் குடித்து பலியானதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 4 நாட்களுக்கு முன்பு பலியாகி அடக்கம் செய்யப்பட்ட ஜெயமுருகனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர், போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாற்றி மாற்றி: மாதவச்சேரியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானதாக போலீசாருக்கு முன்பே தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் அங்கு சென்று இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு அறிவுறுத்தினர். ஆனால், இறந்தவரின் உறவினர்கள், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் அதனால் பிரேத பரிசோதனை மற்றும் வழக்கு எதுவும் தேவையில்லை எனக் கூறினர். அதனால், போலீசார் வேறு வழியின்றி அங்கிருந்து திரும்பிச் சென்றனர். தற்போது அவரது மனைவியே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, மாதவச்சேரியை சேர்ந்த இளையராஜா, திருாநாவுக்கரசு ஆகிய இருவரும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டனர்.
தோண்டி எடுக்க முடிவு: இதையடுத்து, அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் அவர்களின் உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்துவிட்டனர். இதில் இளையராஜாவின் உடல் புதைக்கப்பட்டது. திருநாவுக்கரசுவின் உடல் எரியூட்டப்பட்டது. இதையடுத்து அரசு அறிவித்த நிவாரண நிதி ரூ, 10 லட்சம் தங்களுக்கு கிடைக்கவில்லை என இரு குடும்பத்தினரும் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
மருத்துவமனைக்குச் செல்லாததால் இருவரின் பெயரும் கணக்கில் வராத நிலையில், நிவாரணம் வழங்கப்படாதது குறித்து தற்போது புகார் எழுந்துள்ளதால், இருவரின் உடலையும் ஆராய கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இளையராஜாவின் உடலை தோண்டி எடுத்து நாளை பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் எரியூட்டப்பட்ட திருநாவுக்கரசுவின் எலும்புகளை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில், தற்போது சிலரின் உடல் தோண்டப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications