குடியை கெடுக்க நினைத்த குடிகார கணவனைக் கொன்ற மனைவி - கத்தியோடு சரண்
தர்மபுரி: கணவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கொடுமைப்படுத்தியதால்,அவரை கொலை செய்துள்ளார் அவரது மனைவி.இச்செய்தி தர்மபுரியில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்துள்ள தீர்த்தாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உள்ளனர்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான சின்னத்தம்பிக்கு தினமும் குடித்து விட்டு, வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் பெங்களூரூவுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு திரும்பினர். அப்போதும் கூலியாக வாங்கிகொண்டு வந்த பணம் முழுவதையும் கொண்டுபோய் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சின்னத்தம்பி மனைவி சாந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் விரக்தி அடைந்த சாந்திதூங்கி கொண்டிருந்த சின்னத்தம்பியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் தனது கணவரை கொலை செய்த கத்தியோடு பாலக்கோடு போலீஸில் சாந்தி சரண் அடைந்தார்.
இதனையடுத்து சாந்தியின் வீட்டுக்கு சென்ற போலீஸார் சின்னத்தம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் சாந்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.