இருந்தாதானே 2வது கல்யாணம் நடக்கும்... ஜோசியத்தை நம்பி 70 வயது கணவரைப் போட்டுத் தள்ளிய மனைவி!
சென்னை: உனது கணவருக்கு 2வது கல்யாணம் நடக்கும் யோகம் உள்ளது என்று ஜோதிடர் ஒருவர் கூறியதைக் கேட்டு கலங்கிப் போன மனைவி, தனது கணவரை கொலை செய்து விட்டார்.
ஜோதிடத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஜோதிடர்கள் சொல்வதை வேத வாக்கு போல நினைத்துக் கொண்டு அதற்கேற்ப நடப்போரும் பலர் உள்ளனர். அந்த அடிப்படையில் ஒரு பெண் ஜோதிடர் சொன்னதைக் கேட்டு மனம் குழம்பிப் போய் கணவரையே கொன்று விட்ட சம்பவம் நடந்துள்ளது. என்ன கொடுமை என்றால் கொல்லப்பட்டவருக்கு வயது 70, கொன்றவருக்கு 60!
பெரியபாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவருக்கு 70 வயதாகி விட்டது. இவரது மனைவி பெயர் ஜெயலட்சுமி, இவருக்கு 60 வயதாகிறது. இருவருக்கும் இடையே சமீப காலமாக புகைச்சல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சண்டை நடந்து வந்தது. இதையடுத்து மனம் வேதனை அடைந்த ஜெயலட்சுமி ஜோதிடர் ஒருவரிடம் போனார். ஜாதகத்தைக் காட்டி கேட்டார்.
ஜாகதத்தை பார்த்த அந்த ஜோதிடர், 70 வயதான கதிர்வேலுக்கு "2வது திருமண யோகம்" இருப்பதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு மேலும் குழம்பிப் போனார் ஜெயலட்சுமி. எங்கே கணவர் தன்னை விட்டு விட்டு 2வது திருமணம் செய்து விடுவாரோ என்று பயந்து போனார்.
இதையடுத்து வீட்டுக்கு வந்த அவர் கணவர் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டார். இதில் கதிர்வேல் பரிதாபமாக இறந்து போனார். போலீஸார் ஜெயலட்சுமியைக் கைது செய்துள்ளனர்.
கதிர்வேலுக்கு 2வது திருமண யோகம் இருப்பதாக கூறிய அந்த ஜோதிடர், ஜெயலட்சுமியிடம் உங்களுக்கு ஜெயிலுக்குப் போகும் "யோகம்" அமோகமாக உள்ளது என்பதை ஏன் கூற மறந்தார் என்றுதான் தெரியவில்லை!!