மனைவியின் கள்ளக்காதல்.. கள்ளக்காதலனிடம் பணம் கேட்டு மிரட்டிய கணவர்.. கடைசியில் மர்டர்!
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே மனைவியுடன் வைத்துள்ள கள்ளக்காதலை வெளியில் சொல்லாமல் இருக்க வாட்டர் கேன் சப்ளையரிடம் பணம் கேட்டு மிரட்டிய நபர் படுகொலை செய்யப்பட்டார். மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்ததைத் தொடர்ந்து போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வடக்குமாதவி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். 35 வயதான இவரது மனைவி பெயர் கவிதா. 29 வயது ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். செந்தில் தாறுமாறாக வெளியில் கடன் வாங்கியிருந்தார். கடன் தொகை அதிகரிக்கவே அதைக் கட்ட முடியாமல் திணறினார். இதனால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறி விடுவார். எப்போது வருவார் என்றே தெரியாது.
இந்த நிலையில் கவிதாவுக்கும், வாட்டர் கேன் சப்ளையர் சம்சுதின் என்பவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இது செந்திலுக்குத் தெரிய வந்தது. சம்சுதினிடம் பணம் கறக்க அவர் திட்டமிட்டார். இதையடுத்து நீ எனது மனைவியுடன் வைத்துள்ள தொடர்பை வெளியில் சொல்லப் போகிறேன். போலீஸிலும் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார். இதெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டுமானால் ரூ. 5 லட்சம் பணம் கொடு என்று கேட்டுள்ளார்.
இதுகுறித்து கவிதாவிடம் கூறியுள்ளார் சம்சுதின். அவர் அதிர்ச்சி அடைந்து எனது கணவரை கொன்று விடு என்று கூறியுள்ளார். இதையடுத்து சம்சுதின் செந்திலை நைசாகப் பேசி வரவழைத்தார். பின்னர் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அதைக் குடித்த செந்தில் மயக்கமடைந்தார். அதன் பிறகு அவரை சங்கராபுரம் காட்டுப்பகுதியில் வைத்துக் கொலை செய்தார் சம்சுதின். பின்னர் சின்ன சேலம் அருகே உடலைப் போட்டு விட்டு போய் விட்டார்.
போலீஸார் விசாரணை நடத்தி தற்போது சம்சுதின், கவிதா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். ஒரு நபரின் தவறால் தற்போது இரு குடும்பங்கள் நடு ரோட்டுக்கு வந்துள்ளன.