அதெப்படி என் கள்ளக்காதலை தட்டிக் கேட்கலாம்.. கணவர் மீது கொதி நீரை ஊற்றிய மனைவி
திருப்பூர்: கள்ளக்காதலெல்லாம் இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது. புருஷன் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மனைவி தட்டிக் கேட்க முடியவில்லை. கேட்டால் கொலை நடக்கிறது. அதேபோல மனைவி எப்படி நடந்து கொண்டாலும் அதை கணவன் கண்டு கொள்ளக் கூடாது, கேட்டால் புருஷனை விட கள்ளக்காதலன்தான் முக்கியம் என்று ஓடி விடுகிறார்கள் அல்லது ஆளை வைத்து தீர்த்துக் கட்டி விடுகிறார்கள்.
திருப்பூரில் இப்படித்தான் ஒரு பெண் தனது கள்ளக்காதலை தட்டிக் கேட்ட கணவர் மீது கொதிக்கும் நீரை எடுத்து ஊற்றியுள்ள செயல் நடந்துள்ளது.
பெரியாண்டிபாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சக்திவேல். 42 வயதான இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரது மனைவி பெயர் மாரியம்மாள். 40 வயதாகும் இவருக்கும், இன்னொரு நபருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இது சக்திவேலுக்குத் தெரிய வரவே அதிர்ச்சி அடைந்த அவர் மாரியம்மாளைத் தட்டிக் கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.
நான் அப்படித்தான் இருப்பேன் என்று மாரியம்மாள் அடம் பிடிக்க, சத்தம் போட்டுள்ளார் சக்திவேல். அதைக் கேட்டு கோபமடைந்து கொதித்துப் போன மாரியம்மாள் அடுப்பில் இருந்த கொதி நீரை எடுத்து அப்படியே சட்டியோடு, சக்திவேல் மீது ஊற்றி விட்டார்.
சக்திவேல் முகத்திலும், கையிலும் கொதி நீர் பட்டு துடித்தார். இதையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சக்திவேல். அதன் பேரில் போலீஸார் மாரியம்மாளைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications