மத்திய அரசைக் கண்டித்து அதிமுக எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்களா...?

முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஒருபக்கம் இடிக்க உத்தரவிட்டுள்ள அதிமுக அரசு மறுபக்கம், காமன்வெல்த் விவகாரத்தை வைத்து மத்திய அரசுக்கு நெருக்கடி தர முயலுவதாக கருதப்படுகிறது.
இதன் முதல் கட்டமாக நேற்று சட்டசபையைக் கூட்டி மத்திய அரசை சாடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் நகலை பிரதமருக்கும் முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார்.
இருந்தும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று இலங்கைக்குக் கிளம்பி்ப் போய் விட்டார். இதனால் அதிமுக தரப்பும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதையடுத்து அடுத்தடுத்து மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையிலான நடவடிக்கைகளை அக்கட்சி எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதில் ஒரு க்டடமாக, அதிமுக எம்.பிக்கள் அத்தனை பேரும் ராஜினாமா செய்வது, டெல்லியில் போராட்டம் நடத்துவது என்று பேச்சு அடிபடுகிறது.
அதிமுகவுக்கு நாடாளுமன்றத்தில் மொத்தம் 16 எம்.பிக்கள் உள்ளனர். இவர்களில் 9 பேர் லோக்சபா எம்.பிக்கள், மற்ற 7 பேரும் ராஜ்யசபா எம்.பிக்கள் ஆவர்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா முற்றிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி சட்டசபையைக் கூட்டி தீர்மானம் போட்டும்அதை மத்திய அரசு கண்டு கொள்ளததால் அதிருப்தி அடைந்துள்ள அதிமுக, எம்.பிக்களை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வைத்து டெல்லியில் பரபரப்பைக் கிளப்பவும், டெல்லியில் எம்.பிக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இதுகுறித்து அதிமுக தரப்பிலிருந்து உறுதியான தகவல் ஏதும் இல்லை. அதேசமயம், இப்படி ஒரு திட்டத்தை அதிமுக செயல்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications