ஜல்லிக்கட்டு தடையை நீக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ஏறு தழுவுதல் என்று கூறப்படும் ஜல்லிக்கட்டு பொங்கல் திருவிழா நாட்களில் மதுரை, சேலம்,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்படுவது வழக்கம். காளைகளை அடக்கும் வீர விளையாட்டாக பாரம்பரியமாக நடைபெறுகிறது ஜல்லிக்கட்டு. இந்த நிகழ்ச்சிக்கு கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இதற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தடை காரணமாக இந்த ஆண்டு தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழக அரசு சார்பிலும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் தடை நீங்குவதாக தெரியவில்லை.

தடையை நீக்க நடவடிக்கை
இந்த நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தடைக்குக் காரணமாக இருக்கும் தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்குவதற்கான சட்ட திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கலாச்சார விழாக்கள்
இது குறித்து அட்டார்னி ஜெனரலிடம் சட்ட ஆலோசனை பெற்று உரிய முடிவுகள் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விலங்குகள் கொடுமைப்படுத்தப்படாத வகையில் கலாச்சார விழாக்களை நடத்த வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம்" என்று கூறினார்.

அரசியல் நிர்பந்தம்
முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வுகள் நடத்த கேரளாவுக்கு அனுமதி வழங்கி விட்டு பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டதற்கு அரசியல் நெருக்கடி ஏதேனும் காரணமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், அப்படி அரசியல் நிர்ப்பந்தம் எதுவும் இல்லை என்று அவர் பதில் அளித்தார்.

அனுமதி வழங்கவில்லை
கேரளா அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு ஆய்வு நடத்த அனுமதி எதுவும் வழங்கவில்லை என்றும் அவ்வாறு இதுகுறித்து வெளியான தகவல்கள் தவறானவை என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications