மதிமுகவிற்கு ஆதரவாக களமிறங்கும் அழகிரி? விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கலில் பிரச்சாரம்??
மதுரை: திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி வரும் லோக்சபா தேர்தலில் மதிமுகவிற்கு ஆதரவாக செயல்படப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர தி.மு.க. முடிவு செய்தது. இதற்கு எதிராக மு.க. அழகிரி கருத்து தெரிவித்து இருந்தார். இந்த விவகாரத்தில் கட்சி தலைமைக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது.
பிறந்தநாள் போஸ்டரில் ஒலித்த கழகக் குரலால் அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். கடைசியாக அழகிரியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு சற்று அமைதியாக இருந்த அழகிரி, பிறந்தநாள் முதல் பரபரப்பு கிளப்பி வருகிறார்.
லோக்சபா தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில் அழகிரிக்கோ, அவரது ஆதரவாளர்களுக்கோ தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அழகிரி நேற்று திடீர் என்று டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். தி.மு.க.வும், காங்கிரசும் பிரிந்து விட்ட நிலையில் மு.க. அழகிரி பிரதமரை சந்தித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தி.மு.க. மீது கடுமையாக தாக்கி பேட்டி அளித்தார்.

வைகோ உடன் சந்திப்பு
கடந்த வாரம் மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவும், அழகிரியும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் மனம்விட்டு பேசினார்கள். அரை மணி நேரத்துக்கு மேலாக பேசியதாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சராக வாழ்த்து
அப்போது அழகிரி, லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆவீர்கள் என்று வைகோவை வாழ்த்தியதாகவும் தெரிகிறது.

ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு
வைகோவை சந்தித்த பின்புதான் அழகிரி டெல்லி சென்று ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசியிருக்கிறார். பிரதமரை சந்திக்கும் முன்பு முதல் நாள் மார்ச் 12ம் தேதி இரவு பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை அழகிரி சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக ஆதரவு
டெல்லி அசோகா சாலையில் உள்ள ராஜ்நாத் சிங் வீட்டுக்கு அழகிரி சென்று சந்தித்து பேசியுள்ளார். அப்போது தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக ராஜ்நாத் சிங்கிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

வைகோ உடன் சந்திப்பு
அழகிரி தாமாகவே நேரில் வந்து ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். இதை நாங்கள் சற்றும் எதிர் பார்க்கவில்லை. அப்போது தமிழகத்தில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தானாகவே முன் வந்து தெரிவித்தார்'' என்று கூறினார்கள்.

3 நிபந்தனைகள்
அப்போது அழகிரி தனது 3 நிபந்தனைகளை பா.ஜ.க ஏற்க வேண்டும். அப்போது தான் ஆதரவு தொடர்பான அறிவிப்பை பகிரங்கமாக வெளியிடுவேன் என்று அழகிரி கூறியதாக தெரிகிறது. அவர் என்ன நிபந்தனைகள் விதித்தார் என்பதை வெளியிட பா.ஜ.க வட்டாரங்கள் மறுத்து விட்டனர்.

4 வேட்பாளர்களுக்கு குறி
மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 தொகுதிகளில் திமுக சார்பில் அறிவித்துள்ள வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கும் அழகிரி, இந்த நான்கு தொகுதிகளில் மதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.

மதுரையில் தேமுதிக
ஒருவேளை பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டால் அப்போது யாருக்கு ஆதரவாக அழகிரி பிரச்சாரம் செய்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications