தேர்தல் கூட்டணி முடிவு: ஜவ்வாய் இழுக்கும் ஜி.கே. வாசன்
சென்னை: இந்த மாத இறுதியில் கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டரணி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பேசினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை வரும் 10ம் தேதி முதல் சமர்பிக்கலாம். வரும் 12ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது.
இந்த மாத இறுதியில் கூட்டணி குறித்து முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்படும். கூட்டணி குறித்து கட்சியினர் மற்றும் பொது மக்களுடன் கலந்தாலோசித்து வருகிறேன். எங்களின் தனித்தன்மையை இழந்துவிடாத வகையில் முடிவு செய்வோம்.
பெட்ரோல், டீசல் மீதான உயர்த்தப்பட்ட கலால் வரியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். வெள்ள நிவாரணப் பணிகளில் யாராவது முறைகேடு செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் நேரம் என்பதால் பிற கட்சிகளை போன்று மாநாடு நடத்த விருப்பம் இல்லை என்றார்.