தினகரனுக்கு ஜாமீன் கிடைச்சே ஆகணும்… உறங்காப் புலிகளாக சுற்றித் திரியும் குடும்ப வக்கீல்கள்
இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் வெளியே எடுக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர்.
நான்கு நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு டெல்லி போலீசார், நள்ளிரவில் டிடிவி தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் கைது செய்துள்ளனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டி போட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது. இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் மூலம் முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
லஞ்சம்
சுகேஷிடம் தினகரன் இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருமாறு கூறி ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். கடந்த 17ஆம் சிக்கிய சுகேஷ் மேலும் இரட்டை இலைச்சின்னத்தை பெற சுகேஷ் சந்திரசேகரிடம், டிடிவி தினகரன் 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்தது.
பறிமுதல்
தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த 17ஆம் தேதி டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் இருந்து தினகரனுக்கு பிரச்சனை உச்சமடைந்தது.
கைது
இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் அவரது உதவியாளர் ஜனார்தனா ஆகியோரிடம் 4 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நள்ளிரவில் டெல்லி போலீசார் கைது செய்தனர்.
ஜாமீன்
கைது செய்யப்பட்டுள்ள தினகரனுக்கு சுகேஷுடனான தொடர்பு உறுதி செய்யப்பட்டால் தினகரன்தான் முதல் குற்றவாளி. முதல் குற்றவாளியாக சேர்க்கப்படும்பட்சத்தில் தினகரன் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. என்றாலும், தினகரன் ஜாமீனில் வெளி வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவரது குடும்ப வக்கீல்கள் மூலம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.