ராஜாக்களே.. சோறு சாப்பிடும்போது கொஞ்சம் கூட யோசித்துப் பார்க்க மாட்டீர்களா??
Recommended Video
சென்னை: மிக மிக வேதனையுடன் இதை எழுத வேண்டியுள்ளது. எச். ராஜா போன்ற பொறுப்பான ஒரு தேசிய கட்சியின் தலைவர் இப்படி குரூரமாக பேசக் கூடும் என்றால் அவர் எந்த அளவுக்கு அவர் சார்ந்த கொள்கையால் மோசமாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ளலாம்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்பது எவ்வளவு மோசமான பேச்சு. தமிழகத்திற்கு சோறு போடும் விவசாயிகளை இதை விட கீழ்த்தரமாக விமர்சிக்க முடியாது. தமிழகத்தின் அரிசியை சாப்பிடும் ராஜாவுக்கு அது நெஞ்சில் உறைத்திருக்க வேண்டாமா?
காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் கிடையாது என்று கூறும் எச். ராஜா இதற்கு முன்பு எதியூரப்பா முதல்வராக இருந்தபோது எத்தனை முறை கர்நாடகம் தானாக முன்வந்து தண்ணீர் திறந்து விட்டது என்பதையும் சொல்லியிருக்க வேண்டும் அல்லவா.. அதுதானே முதிர்ச்சியான தலைவருக்கு அழகு?
மக்களுக்கான அரசியல்வாதிகளா இவர்கள்?
மக்களுக்கான அரசியல்வாதிகளே அல்ல நாங்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டுள்ளனர் தமிழக பாஜக தலைவர்கள். சொல்லி வைத்தாற் போல எல்லோருமே மக்கள் விரோதமாகவே பேசி வருகிறார்கள். இதுதான் வியப்பாக உள்ளது. எப்படி மக்களை பகைத்துக் கொண்டு இவர்கள் பதவி, ஆட்சி குறித்தெல்லாம் கனவு காண முடிகிறது என்பது தெரியவில்லை.
எந்த அர்த்தத்தில் பேசுகிறார்
எச். ராஜா எப்போது பேசினாலும் சர்ச்சையாகவே பேசுகிறார். இப்போது கூட மதுரையில் நடந்த வேல் சங்கமம் நிகழ்விற்கான பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் வந்தால் தண்ணீர் கிடைக்காது. பாஜக வந்தால்தான் கிடைக்கும் என பேசியுள்ளார். எத்தனை குரூரமான பேச்சு இது. என்ன அர்த்தத்தில் இப்படிப் பேசுகிறார் ராஜா என்பது புரியவில்லை.
பிளம்பரா இவர்கள்?
காவிரி தமிழகத்தின் உரிமை. கர்நாடகத்தில் யார் வந்தாலும் போனாலும், எந்த அரசு அமைந்தாலும் அமையாவிட்டாலும் காவிரி தமிழகத்திற்கு வந்தாக வேண்டும். அங்கு ஆட்சியில் இருப்போர் நமக்குரிய பங்கை தந்தாக வேண்டும். இந்த அடிப்படை கூட புரியாமல் நாங்க வந்தாதான் தண்ணீர் வரும் என்றால் இவர்கள் என்ன பிளம்பர் வேலையா பார்க்கிறார்கள்.. ஆட்சியில் அமர்ந்ததும் ரிப்பேர் பார்த்து தண்ணீரை அனுப்பி வைக்க?
சாப்பிடும்போது தோணாதா?
கொஞ்சம் கூட மனசாட்சி இருக்காதா தலைவர்களே உங்களுக்கெல்லாம்.? நீங்கள் எல்லாம் இந்த ஊர் விவசாயி உற்பத்தி செய்யும் அரிசியைத்தானே சாப்பிடுகிறீர்கள். சோறு சாப்பிடும்போது மனசாட்சி கேட்காதா.. நமக்கு சோறு போடும் விவசாயிக்கு நாம் என்ன செய்தோம் என்று.? சரி சோறு சாப்பிடவில்லை. சப்பாத்திதான் சாப்பிடுகிறோம் என்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் அதையும் ஒரு விவசாயிதானே விளைவிக்கிறான். விவசாயிகள் குறித்த சிந்தனையே இருக்காதா இந்த தலைவர்களுக்கு?
ஜோசப் விஜய் மீது காட்டிய வேகத்தில்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுகிறது. டைம் கொடுக்கிறது. அதைத் தூக்கி கிடப்பில் போட்டு விட்டது மத்திய அரசு. அந்த அரசுக்குத் தலைமை வகிக்கும் கட்சியின் தமிழக முக்கியப் பொறுப்பாளர் எச் ராஜா. எத்தனை முறை இதற்காக அவர் டெல்லிக்குப் படையெடுத்திருப்பார். எத்தனை முறை மத்திய அரசிடம் போயிருப்பார். எத்தனை முறை விவசாயிகளுக்காக குரல் கொடுத்திருப்பார். "ஜோசப் விஜய்" மீது காட்டிய வேகத்தில் ஒரு துளி கூட காவிரி பாசன விவசாயிக்காக இவர் காட்டவில்லை என்பது எத்தனை பெரிய வெட்கக்கேடு.
எப்படிப்பா மலரும் தாமரை?
ஆக, மக்களுக்காக எதையுமே செய்ய மாட்டோம். கெயில் பிரச்சினை, ஓஎன்ஜிசி பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை, நீட் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை இப்படி மக்கள் தொடர்பான எல்லாப் பிரச்சினைகளிலும் மக்கள் பக்கம் நிற்க மாட்டோம் என்று பிடிவாதமாக இருக்கும் ஒரு கட்சி எப்படி தமிழகத்தில் தாமரை மலரும் என வாய் கூசாமல் கூற முடிகிறது என்பது மிகப் பெரிய உலக ஆச்சரியமாக உள்ளது.
நல்ல தகப்பனாக இருங்கள்
விவசாயிகளுக்காக எதுவுமே செய்யாமல், தமிழகத்தின் உரிமைக்காக போராடாமல், நாங்க ஆட்சிக்கு வந்தால்தான் எல்லாம் நடக்கும் என்று கூறும் எச் ராஜா போன்றோர் தங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும். நம் வீட்டுப் பிள்ளை பசிக்கு அழும்போது, அந்தப் பசியைப் போக்க பதறித் துடிக்க வேண்டுமே தவிர, பக்கத்து வீட்டுக்காரன் சோறு கொடுத்தால்தான் உன் பசியாற்ற முடியும் என்று கூறுபவன் நல்ல தகப்பனாக இருக்க முடியாது. ராஜாக்கள் உணர வேண்டும்.