போயஸ் கார்டன் பங்களாவை தீபக் முற்றுகையிடப் போகிறாரா? போலீஸ் 'அலர்ட்'
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டனிலுள்ள வேதா நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அவர் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை, அவரது அண்ணன் மகன் தீபக் முற்றுகையிடப் போவதாகத் தகவல் வெளியானதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் உடன் பிறந்த அண்ணன் ஜெயக்குமார். ஜெயக்குமாருக்கு தீபா, தீபக் என்று இரு பிள்ளைகள். இதில் தீபா, 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை நிறுவி ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான் தான் என போராடிக்கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா மறைந்தபோது, அவருக்கு சசிகலாவுடன் இணைந்து இறுதிச் சடங்குகளைச் செய்தவர் தீபக். இவர் சசிகலாவை அத்தை என்றே அழைத்து வந்தார். கடந்தவாரம், டிடிவி தினகரன் சசிகலாவை சந்திக்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்ற போது தீபக்கும் உடன் சென்று சசிகலாவை சந்தித்தார்.
அதன்பிறகு, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தீபக் பேட்டியளித்தார். அதில், டிடிவி தினகரன் தலைமையை ஏற்ருக்கொள்ள முடியாது. அதிமுகவை, ஓ.பன்னீர் செல்வம் தலைமையேற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என்று அந்த பேட்டியில் கூறினார்.மேலும், போயஸ் கார்டன் 'வேதா நிலையம்' எனக்கும் என் அக்கா தீபாவுக்கும்தான் சொந்தம் என அதிரடியாகக் கூறிவந்தார்.
இந்தநிலையில், போயஸ் கார்டனில் சசிகலா இல்லாத நிலையில் அந்த வீட்டை முற்றைகையிடப் போவதாக தீபக் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் காவல்துறை, போயஸ் இல்லத்தைச் சுற்றிலும் நிறைய போலீசாரைக் குவித்துள்ளது. போயஸ் கார்டனுக்குள் செல்லும் பின்னி சாலை முழுக்க போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதியான நிமிடத்திலிருந்து போயஸ் இல்லம் வெறிச்சோடிக் கிடக்கிறது. இந்நிலையில் தீபக்கின் இந்த முற்றுகை செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications