பாஜக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? 29ம்தேதி இறுதி முடிவு
சென்னை: பாஜக கூட்டணியில் மதிமுக நீடிக்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து வரும் 29ம்தேதி நடைபெறும் அக்கட்சியின் உயர் நிலைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு வித்திட்டு முதலில் துண்டை போட்டு சீட்டை பிடித்தது மதிமுகதான். இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கடைபிடித்த தமிழர் விரோத போக்கை பாஜக ஆட்சி ஏற்பட்டால் சரி செய்யலாம் என்று வைகோ நினைத்தார். ஆனால் மோடியின் பதவியேற்வு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது வைகோவை ஆத்திரமடைய செய்தது. மோடி, ராஜ்நாத்சிங் என பாஜக உயர்மட்ட தலைவர்களை சந்தித்து ராஜபக்சேவுக்கு அளித்த அழைப்பை திரும்ப பெறுமாறு வைகோ கேட்டுக் கொண்டார். ஆனால் பலனில்லை.

இதையடுத்து ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடத்த வைகோ முடிவு செய்துள்ளார். மதிமுகவின் கொள்கைக்கு எதிராக பாஜக செயல்படுவதாக கருதும் வைகோ, தனது கட்சியின் உயர் நிலை குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை வரும் 29ம்தேதி கூட்டியுள்ளார். உயர் நிலை குழு கூட்டம் அன்றைய தினம் காலை 9 மணிக்கும், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 11 மணிக்கும் நடைபெறுகிறது. கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி இதற்கு தலைமை வகிக்கிறார். சென்னையிலுள்ள, கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
பாஜக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து இடம்பெறுவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இதில் முடிவெடுக்கப்படும். தேர்தலில் தோல்வியடைந்த, வைகோவுக்கு ராஜ்யசபா சீட் அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் கட்சி எடுக்கும் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications