வென்றது அதிமுக - திமுக தவிர எல்லா வேட்பாளர்களுக்கும் டெபாசிட் “காலி”!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி முடிவடைந்துள்ள நிலையில் வெற்றிபெற்ற அதிமுக மற்றும் இரண்டாம் நிலையில் உள்ள திமுக கட்சியின் வேட்பாளர்களைத் தவிர மற்ற 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.
ஒவ்வொரு வேட்பாளரும் குறைந்தபட்சம் 36 ஆயிரத்து 882 ஓட்டுகள் பெற்றால்தான் டெபாசிட்டினைத் திரும்பப் பெற முடியும் என்ற நிலையில், அதிமுக, திமுக தவிர வேறு எந்த வேட்பாளரும் 5 இலக்க வாக்குகளைப் பெறவில்லை. இதில் பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் அடக்கம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்றத்தினால் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா சிறை தண்டனை பெற்ற நிலையில் அவருடைய ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் வளர்மதி, திமுக சார்பில் ஆனந்தன், பாஜக சார்பில் சுப்ரமணியன், மார்சிஸ்ட் சார்பில் அண்ணாத்துரை உட்பட 29 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.
அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 13 ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் வளர்மதி வெற்றி பெற்றார்.
இடைத்தேர்தலில் ஸ்ரீரங்கத்தில் மொத்தம் 2,21,172 ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. டெபாசிட் பெற வேண்டுமானால் குறைந்தது 36,882 ஓட்டுக்களாவது பெற வேண்டும் என்ற நிலையில் அதிமுக, திமுக கட்சிகளைத் தவிர பாஜக, சிபிஎம், டிராபிக் ராமசாமி உட்பட மற்ற 27 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications